“துவரம் பருப்பு” 5 ஆயிரம் டன் இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு !
டெல்லி: இந்தியாவில் பருப்பு விலை உயர்வை கட்டுப்படுத்த 5 ஆயிரம் டன் துவரம் பருப்பை மத்திய அரசு இறக்குமதி செய்ய உள்ளது.
துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு போன்ற பருப்பு வகைகளின் விலை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விண்ணை முட்டும் அளவுக்கு தாறுமாறாக உயர்ந்தது. விளைச்சல் குறைந்ததாலும், பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டது.
மேலும், பருப்பு வியாபாரிகள், பருப்பை பதுக்கி வைத்து, செயற்கையான விலை ஏற்றத்துக்கு ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்தது. இந்த புகார்கள் அடிப்படையில், வருமான வரித்துறை விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டும் பருப்பு விலை உயர்வு பிரச்சினை மீண்டும் பூதாகரமாக வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் சந்தையில் விலை உயர்வு தொடர்ந்து நீடித்து வருவதால், அதனை கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு 5 ஆயிரம் டன் துவரம் பருப்பு மூட்டைகளை இறக்குமதி செய்யும் ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது.
இந்த டெண்டர் பணிகள் நிறைவடைந்து பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 15-ம் தேதிக்குள் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகம் மற்றும் சென்னை துறைமுகத்திற்கு துவரம் பருப்புகள் வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுதும் துவரம் பருப்பு கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.