வெங்காயத்தை தூக்கிச் சாப்பிட்ட “துவரம் பருப்பு” - கூடுதலாக 5 ஆயிரம் டன் இறக்குமதி செய்ய முடிவு!
டெல்லி: இந்தியாவில் பருப்பு விலை உயர்வைக் கட்டுப்படுத்த 15 ஆயிரம் டன் பருப்பினை இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. துவரம் பருப்பு மட்டும் 5 ஆயிரம் டன் இறக்குமதி செய்யப்பட உள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான பருப்பு வகைகள் அனைத்தும் கிலோ ரூபாய் 100 க்கு மேல் உயர்ந்துவிட்டது. துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவை அதிகபட்சமாக கிலோ ரூபாய் 155 வரை விற்கிறது.
இதனால் பருப்பு விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகளின் உயர்மட்டக்குழு கூட்டம் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில், துவரம் பருப்பு கூடுதலாக 5 ஆயிரம் டன் இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே 10 ஆயிரம் டன் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவை வெளிநாடுகளில் இருந்து வந்து கொண்டு உள்ளது.
இதில் முதல்கட்ட சரக்குகள் இந்த மாதம் 23 ஆம் தேதி இந்தியா வந்துசேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவலை மத்திய நுகர்வோர் நலத்துறை செயலாளர் சி.விஸ்வநாத் தெரிவித்துள்ளார்.