ரயில் பயணிகள் கட்டணம் உயர்வா?... விரைவில் வெளியாகிறது புதிய "வரி விதிப்பு"
ரயில்வேத் துறையை நவீனப்படுத்துவதற்கு கூடுதல் நிதி தேவைப்படுவதால் பாதுகாப்பு செஸ் வரி விதிப்பது குறித்த பரிசீலித்து வருவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
டெல்லி: ரயில்வே துறையை மேம்படுத்த பாதுகாப்பு செஸ் வரி என்று சொல்லப்படும் புதிய வரி விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிவேக ரயில்களை இயக்குவது தொடர்பான நடவடிக்கைகளை ரயில்வே எடுத்து வருகிறது. இத்தகைய ரயில்களை இயக்குவதற்கு தண்டவாளங்கள் உறுதியானதாகவும் எத்தகைய வேகத்திற்கும் ஈடு கொடுக்கும் வகையில் இருப்பது அவசியம். ரயில்வேயை அதினநவீன மயமாக செயல்படுத்த அந்தத் துறைக்கு கூடுதல் நிதி தேவைப்படுகிறது.
மேலும் நாடு முழுவதும் நேரிடும் ரயில் விபத்துகளில் பெரும்பாலானவை ஆளில்லா ரயில்வே கிராசிங்குகளில் நிகழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது. இதே போன்று தண்டவாளத்தின் உறுதியற்ற தன்மையால் ரயில்கள் தடம்புரண்டு விபத்துகளும் நடைபெற்று வருகின்றன. எனவே ஆளில்லா ரயில்வே கிராசிங்குகளுக்கு முடிவு கட்டவும் உறுதியற்ற தண்டவாளத்தை மாற்றவும் ரயில்வேக்கு ரூ.32 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுகிறது.
இதனால் செஸ் வரி என்ற புதிய வரியை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு தெரிவித்துள்ளார். 2002ம் ஆண்டில் நிதிஷ்குமார் ரயில்வே அமைச்சராக இருந்த போது செஸ் வரி உயர்த்தப்பட்டு அதன் மூலம் சிறப்பு நிதியாக 17 ஆயிரத்து 500 கோடி பெறப்பட்டதாவும், அந்த நிதி பழைய ரயில்வே மேம்பாலங்களை சீர் செய்யும் பணி மற்றும் தண்டவாளங்களை புதுப்பிக்கும் பணிக்காக பயன்படுத்தப்பட்டதாக சுரேஷ் பிரபு கூறினார். இந்த செஸ் வரி 2 சதவீதத்திற்குள் நியமிக்கப்படும் என்பதால் பயணிகள் ரயில் கட்டணம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.