பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை அரசு சேவைகளில் பயன்படுத்த நவ.30 வரை அவகாசம்? உத்தரவுக்கு வாய்ப்பு
டெல்லி: பழைய ரூபாய் நோட்டுக்களை முக்கியமான சில குறிப்பிட்ட இடங்களில் பயன்படுத்திக்கொள்ள கொடுக்கப்பட்ட சலுகை இம்மாதம், 30ம் தேதிவரை நீடிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, இந்த சலுகை இன்று இரவோடு முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புழக்கத்திலுள்ள ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் இனிமேல் செல்லாது என, பிரதமர் நரேந்திர மோடி, நவம்பர் 8ம்தேதி அறிவித்தார். அதேநேரம், பெட்ரோல் நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு பஸ், விமான நிலையம், ரயில் டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் அரசின் அடிப்படை சேவைகளுக்கு, நவம்பர் 11ம் தேதி இரவு வரை புழக்கத்திலுள்ள ரூபாய் நோட்டுக்கள் செல்லுபடியாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதையடுத்து, இந்த காலக்கெடு நவம்பர் 14ம் தேதி இரவு வரை நீடிக்கப்பட்டது. அதன்பிறகு நவம்பர் 24ம் தேதியான இன்று இரவு வரை சலுகை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நாட்டில் இன்னும் பணப் புழக்கம் முழு வீச்சில் இல்லை. எனவே இம்மாதம் 30ம் தேதிவரை சலுகையை நீட்டிக்க அரசு யோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இன்று மாலை இந்த அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி பெட்ரோல் பங்குகள், அரசு மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், அரசு பஸ் புக்கிங்களுக்கு பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லுபடியாகும் என அறிவிக்கப்படலாம். அதேபோல, சொத்துவரி, தண்ணீர்வரி, மின்சார கட்டணம் போன்றவற்றையும் பழைய ரூபாய் நோட்டுக்களை கொண்டு செலுத்த வரும் 30ம் தேதிவரை அவகாசம் தரப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலை வரை பொறுத்திருந்து பார்க்கலாம்.