தமிழகம் உட்பட நாடு முழுக்க தொடரும் ஐடி ரெய்டுகள்.. தூக்கம் தொலைத்த அரசு உயர் அதிகாரிகள்
டெல்லி: தமிழகம் மட்டுமின்றி நாடு முழுக்க அரசு உயர் அதிகாரிகளை குறி வைத்து வருமான வரித்துறை அதிரடி சோதனைகளை நடத்தி வருவதால் அரசியல்வாதிகளின் பினாமிகள் போல செயல்பட்ட அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவிவருகிறது. அவர்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டதாக அதிகாரிகள் மட்டத்தில் பேசப்படுகிறது.
புழக்கத்திலிருந்த அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டு ஒழிப்பு அமலுக்கு வந்தது முதலே, நாடு முழுவதும் உள்ள ஐஏஎஸ் மற்றும் உயர் அதிகாரிகளை குறிவைத்து வருமான வரித்துறை அதிரடி சோதனைகளை நடத்த ஆரம்பித்துள்ளது.
இதுபோன்ற ஐஏஎஸ் அதிகாரிகளிடம்தான் லஞ்ச லாவண்ய பணமும், அரசியல்வாதிகள் சேர்த்த பணமும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக உளவுத்துறை அளித்த தகவல்கள் அடிப்படையில் துல்லியமாக ரெய்டுகள் நடக்கின்றன.
இதன் உச்சம்தான், தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன் ராவ் வீட்டிலேயே நடத்தப்பட்ட ரெய்டு. அவரது வீட்டில் மட்டுமல்ல மேலும் பல அதிகாரிகளிடமும் தொடர்ந்து ரெய்டுகள் நடந்தபடிதான் உள்ளன. தமிழக அரசு சேமிப்பு கிடங்கு நிர்வாக இயக்குநர் நாகராஜுக்கு சொந்தமான பல்லவாரம் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஒரு வாரகலாமாக மிக ரகசியமாக சோதனை நடத்தியதாக கூறப்பட்டது.
நாகராஜ் இல்லத்தில் இருந்து 6 கிலோ தங்கமும், கிடத்தட்ட 2 கோடி ரூபாய் அளவில் ரொக்கப்பணமும் வருமான வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. மேலும் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து தமிழக தலைமைச் செயலர் ராம் மோகன் ராவ் மற்றும் தொழிலதிபர் சேகர் ரெட்டியுடன் இவருக்கு நேரடித் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை செய்து வருகிறார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் நாகராஜ் இதை மறுத்துள்ளார்.
அதேபோல கோடம்பாக்கத்தில் வசித்து வரும் மாஜி வனத்துறை அதிகாரி கல்யாண சுந்தரம் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். பல முக்கிய முக்கிய ஆணங்களும் பெருமளவில் பணம் மற்றும் தங்கம் சிக்கியுள்ளதாகத் தெரிகிறது. ராம் மோகன் ராவுடன் நேரடித் தொடர்பு மற்றும் சட்ட விரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்ட அரசு உயர் அதிகாரிகளின் பட்டியல் வருமான வரித் துறை அதிகாரிகள் வசம் உள்ளதாகவும், அவர்கள் இல்லங்களில் தொடர்ச்சியான அதிரடி சோதனை எந்த நேரத்திலும் நிகழலாம் என்று கூறப்படுகிறது.
தமிழகம் மட்டுமல்ல, நேற்று நள்ளிரவு முதல் கர்நாடகாவில் உள்ள 7 உயர் அரசு அதிகாரிகள் இல்லம் மற்றும் அவர்களுக்கு மிக நெருக்கமான 13 இடங்களிலும் ஊழல் தடுப்புப் பிரிவினர் அதிரடி விசாரணை செய்து வருகிறார்கள். இந்த அதிகாரிகளுக்கும் தமிழக தலைமைச் செயலருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணையின் முடிவில் தெரிய வரும் என்று கூறப்படுகிறது. இதுபோன்ற ரெய்டுகள் அதிகாரிகள் வர்க்கத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.