6 இடங்களில் வருது ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் - ஒப்புதல் அளித்தது மத்திய அரசு
டெல்லி: எம்.பி.ஏ மாணவர்களுக்கு நற்செய்தியாக விளங்கும் வகையில் நாடெங்கிலும் 6 புதிய ஐஐஎம்களை அமைப்பதற்கான கருத்திற்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.இதனைத்தொடர்ந்து வரும் கல்வியாண்டிலேயே இந்த நிறுவனங்கள் செயல்பாட்டுக்கு வரும்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஆந்திர மாநிலத்திலுள்ள விசாகப்பட்டினம், பீகாரிலுள்ள புத்த கயா, இமாச்சல் பிரதேசத்தில் உள்ள சிர்மாவூர், மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர், ஒடிசாவிலுள்ள சம்பல்பூர், பஞ்சாபிலுள்ள அமிர்தசரஸ் ஆகிய 6 இடங்களில் புதிதாக ஐஐஎம் கல்வி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.
இந்த கல்வி நிறுவனம் ஒவ்வொன்றும் முதுநிலை படிப்புக்கு 140 மாணவர்களை சேர்க்க உள்ளன. இந்த புதிய கல்வி நிறுவனங்கள் 7ஆண்டுகள் முடிவில் 560 மாணவர்களை சேர்க்கும் வகையில் மாணவர் எண்ணிக்கையை உயர்த்தும். தற்போது செயல்பட்டு கொண்டு இருக்கும் ஐஐஎம்கல்வி நிறுவனங்கள் புதிய கல்வி நிறுவனங்களுக்கு வழிகாட்டுவதாக இருக்கும்.
இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் பிறப்பிக்கப்பட்ட நெருக்கடி நிலைக்கு எதிராகப் போராடியவரும், ஜனதா கட்சிகளின் வளர்ச்சிக்கு வித்திட்டவருமான மறைந்த ஜெய் பிரகாஷ் நாராயணனுக்கு தேசிய நினைவரங்கம் அமைக்கவும் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.