தலைவர்கள் பயணம்... ஏர் இந்தியாவுக்கு ரூ 600 கோடி கட்டண பாக்கி வைத்திருக்கும் மத்திய அரசு!
டெல்லி: தலைவர்கள் பயணம் செய்த வகையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய அரசு ரூ 600 கோடியை கட்டணமாகச் செலுத்த வேண்டியுள்ளது. ஆனால் இதனைக் கட்டாமல் இன்னும் பாக்கி வைத்துள்ளது அரசு.
ஏர் இந்தியா விமானங்களில் மத்திய அரசில் அங்கம் வகிக்கிற முக்கிய தலைவர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். குடியரசுத் தலைவர், பிரதமர் போன்றோர் தனி விமானங்களில் உள்நாடு, வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்கின்றனர்.
அமைச்சர்கள் மட்டத்தில் உள்ளவர்களும் இலவச விமானப் பயணங்கள் மேற்கொள்கின்றனர்.
இதற்கெல்லாம் மத்திய அரசின் உள்துறை, வெளியுறவுத் துறை மற்றும் இதர துறை அமைச்சகங்கள் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
ஆனால் இன்றுவரை கட்டணம் செலுத்தாமல் ரூ 600 கோடியை பாக்கியாக வைத்துள்ளனர்.
ஏர் இந்தியா ஏற்கெனவே பெரும் கடன் மற்றும் நஷ்டத்தில் இப்பவோ அப்பவோ என்ற நிலையில்தான் தவிக்கிறது. ரூ.40 ஆயிரம் கோடி கடன் உள்ளது. தொடர் நஷ்டங்களுக்கு பின்னர், கடந்த டிசம்பரில்தான் இந்த நிறுவனத்துக்கு ரூ.14.6 கோடி நிகர லாபம் கிடைத்ததாக தகவல் வெளியானது.