ரொக்க பரிவர்த்தனைக்கான உச்சவரம்பை ரூ2 லட்சமாக குறைக்க திடீர் பரிந்துரை!
வங்கிகளில் ரொக்கப் பரிவர்த்தனைக்கான உச்சவரம்பை ரூ3 லட்சத்தில் இருந்து ரூ2 லட்சமாக குறைக்க மத்திய அரசு திடீரென பரிந்துரைத்துள்ளது.
டெல்லி: வங்கிகளில் ரொக்க பரிவர்த்தனையின் உச்சவரம்பை ரூ3 லட்சத்தில் இருந்து ரூ2 லட்சமாகக் குறைக்க மத்திய அரசு திடீரென பரிந்துரைத்துள்ளது.
ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்புக்குப் பின்னர் வங்கிகள் மற்றும் ஏடிஎம்.களில் பணம் எடுப்பது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் ஏகப்பட்ட குழறுபடிகள் தொடருகின்றன. நடப்பாண்டு பட்ஜெட்டில் வங்கிகளில் ரூ3 லட்சம் வரை ரொக்கப் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ரூ3 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கு 100% அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இது வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ரொக்கப் பரிவர்த்தனையை ரூ3 லட்சத்தில் இருந்து ரூ2 லட்சமாக குறைக்க மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நிதி மசோதாவில் இந்த பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. இம்மசோதா நிறைவேறினால் ரூ2 லட்சத்துக்கும் மேல் ரொக்கப் பரிவர்த்தனை செய்தால் அதற்கான அபராதத்தை செலுத்த நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.