நைட் ஷிப்ட் பணியாற்ற பெண்களுக்கும் அனுமதி.. சட்டத் திருத்தம் கொண்டுவந்தது கர்நாடக அரசு
பெங்களூர்: கர்நாடகாவில் நைட் ஷிப்ட் பணியாற்ற பெண்களுக்கும் அனுமதியளித்து சட்டத் திருத்தம் கொண்டுவந்துள்ளது அம்மாநில அரசு.
ஐடி சார்ந்த துறைகளை தவிர்த்து பிற நிறுவனங்களில் பெண்களை இரவு பணியாற்ற அனுமதிக்காமல் இருந்தது கர்நாடக அரசு. பாதுகாப்பு விஷயத்தை இதற்கு காரணமாக கூறி வந்தது.
இந்நிலையில், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான சட்டங்களில் திருத்தம் கொண்டுவந்துள்ள கர்நாடக அரசு, பிற துறைகளிலும் பெண்களை இரவுப் பணி செய்ய அனுமதித்துள்ளது. அதேநேரம், பெண்கள் பாதுகாப்புக்காக நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.
இரவு பணியாற்றும் பெண்களின் குழந்தைகளுக்காக அலுவலகமே கிரீச் வசதி செய்து தர வேண்டும், பெண்களை வீட்டில் இருந்து அழைத்து வரவும் கொண்டு சென்றுவிடவும், வாகன வசதி செய்து தர வேண்டும், இரவு பணிக்கு பெண்கள் சம்மதித்ததற்கான எழுத்துப்பூர்வ ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும், பெண்களுக்கு தனி கழிவறை அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட நெறிமுறைகளை கர்நாடக அரசு வெளியிட்டுள்ளது. இந்த வசதிகள் செய்து தரப்பட்டால் மட்டுமே பெண்கள் அங்கு பணியாற்ற அனுமதிக்க முடியும் என அரசு தெரிவித்துள்ளது.
அரசு முடிவை பெண்கள் நல சங்கங்கள் பலவும் வரவேற்றுள்ளன. அதேநேரம், பாதுகாப்பு விஷயத்தில் அரசு கவனம் செலுத்த கேட்டுக்கொண்டுள்ளன.