இந்தியா வரும் பயணிகளுக்கு ”நோ எபோலா” சர்ட்டிபிகேட் அவசியம் – மத்திய அரசு அறிவிப்பு
டெல்லி: எபோலோ நோயால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் வரும் பயணிகள் "நோ எபோலோ" சான்றிதழ் கொண்டு வருவது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் எபோலா நோய்க்கு சிகிச்சை பெற்ற லைபீரிய நாட்டைச் சேர்ந்த ஒருவரை சோதனையிட்ட போது அவரின் விந்தணுக்களில் எபோலா அறிகுறி இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவருக்கு இந்தியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் எபோலா குறித்து மக்களவையில் பேசிய சுகாதார அமைச்சர் ஜேபி நாட்டா, "எபோலோ நோய்க்கு சிகிச்சை பெற்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் அந்நாட்டு சுகாதாரத்துறையிடம் இருந்து சான்றிதழ் பெறாமல் இருப்பது கவலைக்குரிய அம்சம்.
எபோலா நோய் தொற்றுள்ள நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் சம்பந்தப்பட்ட நாட்டின் சுகாதார அமைச்சகத்தில் இருந்து பெற்ற "நோ எபோலா" சான்றிதழை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
எபோலா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதில் இருந்து 90 நாட்கள்வரை இந்தியாவுக்கு வர வேண்டாம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.இது தொடர்பான பயண அறிவிக்கை, , நைஜீரியா, கானா, நியமி, ஐவரிகோஸ்ட், செனகல் ஆகிய நாடுகளில் உள்ள தூதரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.