5 மாநிலங்களில் பதுக்கல் பேர்வழிகளிடம் இருந்து 5,800 டன் பருப்பு பறிமுதல்... தமிழகத்திலும் ரெய்டு!!
டெல்லி: பருப்புகளின் விலை ஒவ்வொரு குடும்பத்தையும் பதற வைத்துக் கொண்டிருக்கும் ஆந்திரா உட்பட 5 மாநிலங்களில் பதுக்கல் பேர்வழிகளிடம் இருந்து 5,800 டன் பருப்பை மத்திய அரசு பறிமுதல் செய்துள்ளது. மேலும் கர்நாடகா, தமிழகத்தில் பதுக்கல்காரர்களின் குடோன்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் துவரம் பருப்பின் விலை 200 ரூபாயை தாண்டி உயர்ந்துவருகிறது. இந்த நிலையில் ஏற்றுமதியாளர்களுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை குறைத்தும், மொத்த கொள்முதல் செய்பவர்களுக்கு இருப்புவைக்க அனுமதிக்கப்பட்ட அளவீட்டை குறைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில மாதங்களில் பதுக்கல் நபர்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 5,800 டன் பருப்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையிலான ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலாளர் சி. விஸ்வநாதன், தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் 2,549 டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேசத்தில் 2,295 டன், ஆந்திராவில் 600 டன், கர்நாடகத்தில் 360 டன், மகாராஷ்டிராவில் 10 குவிண்டால் பருப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன; இன்றுகூட கர்நாடகவின் மைசூர், குல்பர்கா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல இடங்களில் இதுபோன்ற அதிரடி சோதனை செய்யப்பட்டன என்றார்.