ஆளுநர் திரிபாதி என்னை மிரட்டுகிறார்.. மமதா பகீர் குற்றச்சாட்டு
கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி தொலைபேசியில் என்னை மிரட்டுகிறார் என அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு பரகணாஸ் மாவட்டம் பதுாரியா கிராமத்தில் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளளது.
இதுதொடர்பாக விளக்கம் கேட்பதற்காக முதல்வர் மமதாவை ஆளுநர் கேசரிநாத் திரிபாதி அழைத்தார். ஆளுநர் மாளிகைக்கு மமதாபானர்ஜி சென்று கவர்னரை சந்தித்துப் பேசினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநர் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மிரட்டி வருகிறார். அவரது செயல் பா.ஜ.க.வினர் பேசுவது போல் உள்ளது. இது என்னை வருத்தமடைய செய்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்பதை அவருக்கு சொல்லிக் கொள்கிறேன்.
அவர் பா.ஜ.க. வட்டச் செயலாளர் போல் செயல்பட்டு வருகிறார். அவரது பதவிக்கு இது ஏற்புடையதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மத்திய அரசால் நியமிக்கப்பட்டவர் ஆளுநர். ஆனால், நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். ஆளுநரின் கருணையால் முதல்வர் பதவியை நான் வகிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார். மமதா பானர்ஜியின் குற்றச்சாட்டை ஆளுநர் கேசரிநாத் திரிபாதி மறுத்துள்ளார்.