ஓபிஎஸ்ஸா.. சசிகலாவா.. ஆட்சி அமைக்கப் போவது யார்.. இறுதி முடிவு ஆளுநர் கையில்... மத்திய அரசு விளக்கம்
தமிழகத்தில் ஓபிஎஸ் அரசு நீடிக்குமா அல்லது சசிகலா முதல்வர் ஆவாரா என்ற முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநரிடமே உள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லி: தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து ஆளுநர் தக்க முடிவுகளை எடுப்பார் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் முதல்வர் ஓபிஎஸ் நேற்று மாலை 5 மணிக்கு ஆளுநரை சந்தித்து, தமிழகத்தின் அரசியல் சூழல் குறித்து பேசினார். அதே போன்று சசிகலா 7.30 மணிக்கு ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதனைத் தொடர்ந்து ஆளுநர் ஓர் அறிக்கை தயார் செய்து அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், தமிழக அரசியல் நிலவரம் குறித்து ஆளுநர் முடிவு எடுப்பார் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மாநில அரசியல் அமைப்பு செயல்பாட்டிற்கு ஆளுநரே தலைவர் என்று கூறியுள்ள ராஜ்நாத் சிங், ஆளுநரின் முடிவே இறுதியானது என்றும் தெரிவித்துள்ளார்.
இனி, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பது தெரிய வரும். அவர் கூறும் முடிவின் அடிப்படையில், ஓபிஎஸ் தொடருவாரா அல்லது சசிகலா முதல்வராக பொறுப்பேற்பாரா கேள்விக்கு விடை கிடைக்கும்.