புதிய ஆட்சி அமைவதில் முட்டுக்கட்டை: ஜம்மு காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி!!
டெல்லி: ஜம்மு காஷ்மீர மாநிலத்தில் புதிய ஆட்சி அமைவதில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடிப்பதால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபைத் தேர்தல் 5 கட்டங்களாக நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 87 தொகுதிகளில் மக்கள் ஜனநாயக கட்சி (பி.டி.பி.) 28, பா.ஜ.க 25, தேசிய மாநாட்டு கட்சி (என்.சி) 15, காங்கிரஸ் 12 இடங்களில் வெற்றி பெற்றன.
ஆட்சி அமைக்கத் தேவையான 44 இடங்களை எந்தக் கட்சியும் பெறவும் இல்லை. அதிக இடங்களைக் கைப்பற்றிய பி.டி.பி, பா.ஜ.க. ஆகியவை ஆட்சி அமைக்க மேற்கொண்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் வோரா, பா.ஜ.க., பி.டி.பி. தலைவர்களை அழைத்து பேச்சு நடத்தினார். இதையடுத்து இரு கட்சிகளும் கூட்டணி அமைச்சரவை அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
ஆனாலும் இதுவரை அந்த இரு கட்சிகளிடமும் ஒருமித்த முடிவு ஏற்படவில்லை. முதல்வர் பதவியை முதலில் ஏற்பது யார் என்பதில் இரு கட்சிகளிடையே பிடிவாதம் காணப்பட்டது.
பிறகு பி.டி.பி. தலைவர் முப்தி முகம்மது சயீதுக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க பா.ஜ.க. ஒப்புதல் தெரிவித்தது. ஆனால் குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுப்பதில் இரு கட்சிகளிடமும் கருத்து வேறுபாடு எழுந்தது. இதனால் கூட்டணி ஆட்சி அமைவதில் முட்டுக்கட்டை நீடிக்கிறது.
தற்போதைய காஷ்மீர் சட்டசபையின் 6 ஆண்டு பதவிக்காலம் வருகிற 18-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதற்கு இன்னும் 10 நாட்களே உள்ளன. இந்நிலையில் காபந்து அரசின் முதல்வராக தாம் தொடர்ந்தும் நீடிக்க விரும்பவில்லை என்று ஒமர் அப்துலா அறிவித்ததால் நெருக்கடி அதிகமானது.
இதனால் ஜம்மு காஷ்மீரத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர ஆளுநர் வோரா மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார்.
இதனடிப்படையில் ஜம்மு காஷ்மீரத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாம் என்று மத்திய அரசும் பரிந்துரைத்து நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ஒப்புதல் அளித்துள்ளார்.