தேசிய மனித உரிமை கமிஷன் தலைவராகும் கேரள ஆளுநர் சதாசிவம்!
திருவனந்தபுரம்: கேரள மாநில ஆளுநரான தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவம் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் பி.சதாசிவம். அந்த பதவியில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். அதன்பின்னர் கேரள மாநில ஆளுநராக பி.சதாசிவம் பதவி வகித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக இருந்து வரும் நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் வருகிற மே 12-ந் தேதி பதவியில் இருந்து ஓய்வு பெறுகிறார். அதைத்தொடர்ந்து மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவியில் நீதிபதி பி.சதாசிவம் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றியவர் மட்டுமே இந்த பதவியில் நியமிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது. பிரதமர், பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் சபாநாயகர் ஆகியோர் கொண்ட குழு மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரை தேர்வு செய்யும்.
இதுகுறித்து கேரளா முதல்வ உம்மன்சாண்டி கூறுகையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பதவிக்கு நீதிபதி சதாசிவம் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிறந்த நீதிபதியான அவர், கேரள அரசுடன் நல்லுறவு கொண்டவர். கேரளாவை விட்டு அவர் செல்வது பேரிழப்பாகும் என்றார்.