யாரங்கே... காணாமல் போன கோழிகளை கண்டுபிடியுங்க.. ஆடுகளை தேடுங்க... 'அசத்தும்' உ.பி. ஆளுநர் உத்தரவு
லக்னோ: உத்தரப்பிரதேச அரசியல்வாதிகளுக்காக கால்நடைகளைத் தேடுவதற்காக தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் போல.. அம்மாநில பொதுமக்கள் சிலர் அளித்த புகாரைத் தொடர்ந்து காணாமல் போன கோழி மற்றும் ஆடுகளை கண்டுபிடிக்க மாநில அரசுக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரபிரதேச கவர்னர் ராம் நாயக் அண்மையில் அம்மாநில அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், ராம்பூரில் உள்ள பர்கானுல்லா என்பவரின் கோழி பண்ணையில் காணாமல் போன கோழிகளை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அதாவது கோழி பண்ணை உரிமையாளர் பண்ணையில் இருந்த கோழிகள் காணாமல் போனதும் முதலில் வழக்கம் போல் உள்ளூர் போலீசில்தான் புகார் கொடுத்துள்ளார். வழக்கம் போலவே போலீசாரும் இதை கண்டு கொள்ளவில்லை.
இதனால் விரக்தி அடைந்த அவர் உடனடியாக ஆளுநருக்கு மனு அனுப்பிவிட்டார். இதைத் தொடர்ந்துதான் தற்போது இந்த உத்தரவை மாநில அரசுக்கு ஆளுநர் பிறப்பித்துள்ளார்.
இதனிடையே ராம்பூரை சேர்ந்த மற்றொரு விவசாயி கோழிகளுக்கு கருணை காட்டியது போல காணாமல் போன எனது ஆடுகளுக்கும் கருணை காட்ட வேண்டும் என்று புதிய புகார் ஒன்றை ஆளுநருக்கு அனுப்பியுள்ளாராம்.
இதே உத்தரப்பிரதேச அமைச்சர் ஆசாம் கானின் எருமை மாடுகள் திருடு போயின. இதைய ஓராண்டாக போலீசார் தேடி கண்டுபிடித்து மீட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.