நினைத்தது நடந்தது... கர்நாடகாவிலும் பாஜ ஆட்சி அமைக்கிறது... ஆளுநர் அழைப்பு விடுத்தார்!
பெங்களூரு: கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும்படி, 104 எம்எல்ஏக்களை கொண்டுள்ள பாஜகவுக்கு கர்நாடக ஆளுந் வாஜூபாய் வாலா முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார் என பாஜக வட்டாரங்கள் தகவலை கசிய விட்டன. அதையடுத்து நாளை காலை 9.30 மணிக்கு எடியூரப்பா தலைமையிலான அரசின் பதவியேற்பு விழா நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 எம்எல்ஏக்களுடன் பாஜக தனிப் பெரும் கட்சியாக உள்ளது. ஒரு சுயேச்சையின் ஆதரவு இருப்பதாகவும் பாஜக கூறியுள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் 78 எம்எல்ஏக்களின் ஆதரவுடன், 38 தொகுதிகளில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இந்த நிலையில் ஆட்சி அமைக்கும்படி பாஜகவுக்கு ஆளுநர் வாஜூபாய் வாலா இன்று இரவு முறைப்படி அழைப்பு விடுத்தார் என கூறப்படுகிறது. அதன்படி, எடியூரப்பா தலைமையிலான அரசு நாளை காலை 9.30 மணிக்கு பதவியேற்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் ராஜ்பவனில் நடந்து வருகிறது.
பாஜகவுக்கு அழைப்பு விடுத்தால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம் என்று காங்கிரஸ் மற்றும் மஜத கூறியுள்ளன. அதனால், நாளை காலையில் அக்கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்பாகவே பதவியேற்பு விழாவை முடித்துவிடலாம் என்பதே பாஜக திட்டமாக உள்ளதாம்.
எடியூரப்பா பதவியேற்க உள்ளதாக பாஜக தரப்பில் டுவிட்டர் மூலம் விஷயம் கசியவிடப்பட்டது. ஆனால் பிறகு அவை டெலிட் செய்யப்பட்டன.
கோவா, மணிப்பூர், நாகாலாந்து போன்ற மாநிலங்களில் நடந்ததைப் போலவே, தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையிலும் பாஜகவுக்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்படலாம் என்று பரவலாக அஞ்சப்பட்டது. நினைத்தைப் போலவே அது நடந்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.