ஜனாதிபதியிடம் அறிக்கை தாக்கல் செய்த ஆய்வு குழு... ஆளுநருக்கு கிடைக்கிறதா கூடுதல் அதிகாரங்கள்?
டெல்லியில் குடியரசுத் தலைவரை சந்தித்த ஆளுநர்கள் குழு தங்களின் அதிகாரம் மற்றும் பணி தொடர்பான பங்களிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது
Recommended Video
டெல்லி: சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் ஆளுநர்களின் பங்களிப்பு என்ன? என்பது குறித்த அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் ஆளுநர்கள் குழு தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற 48-வது ஆளுநர்கள் மாநாட்டில், அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதில் மாநில ஆளுநர்களின் பங்களிப்பு பற்றி ஆய்வு செய்ய கவர்னர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு ஆளுநர்களின் அதிகார மாற்றம், செய்யப்படவேண்டிய பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தயார் செய்தது.
இந்நிலையில் தமிழகம், ஆந்திரா, உத்தரபிரதேசம், திரிபுரா உள்ளிட்ட நான்கு மாநிலங்களைச் சேர்ந்த ஆளுநர்கள் நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து, சமுதாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதில் ஆளுநர்களின் பங்களிப்பு என்ன என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்தனர்.
மாநில அரசுகளை வழிநடத்துவது, திட்டங்களை நிறைவேற்றுவது உள்ளிட்டவைகளில் ஆளுநரின் பங்குகள் குறித்தும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதுவரை அரசு விழாக்களில் மட்டும் தலைக்காட்டும் ஆளுநர்களின் அதிகாரம் வரம்பு உயர்த்தப்பட்டு, களப்பணியிலும், அரசு பணியிலும் ஆளுநர்களின் பங்களிப்பு இருக்கும் விதமாக மாற்றங்களை மத்திய அரசு கொண்டு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
டெல்லி, புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட பாஜக ஆளாத மாநிலங்களில் அரசுடன் மோதல் போக்கை ஆளுநர்கள் கடைப்பிடித்து வரும் நிலையில், ஆளுநர்களின் இந்த அறிக்கை மேலும் பரபரப்பை கிளம்பியுள்ளது.