ஹலோ, நீங்க ஏன் ராஜினாமா செய்யக் கூடாது?: அட்டர்னி ஜெனரலிடம் கேட்ட 'சோனியா'!
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போன்று அட்டர்னி ஜெனரல் வாஹனவதியிடம் போனில் பேசியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு நிறுவனத்தில் பணிபுரியும் பெண் அதிகாரி ஒருவர் அட்டர்னி ஜெனரல் வாஹனவதிக்கு போன் செய்து பேசியுள்ளார். போனில் தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார். சோனியா மருத்துவ பரிசோதனைக்காக நியூயார்க் சென்றபோது இந்த போன் செய்யப்பட்டுள்ளது.
நான் நியூயார்க்கில் இருந்து சோனியா பேசுகிறேன். உங்கள் வேலையில் எனக்கு திருப்தி இல்லை. நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு உள்ளிட்ட வழக்குகளில் நீங்கள் செயல்படும் முறை அதிருப்தி அளிக்கிறது. நீங்கள் ஏன் உங்கள் வேலையை ராஜினாமா செய்வது குறித்து யோசிக்கக் கூடாது என்று அந்த பெண் தெரிவித்துள்ளார்.
அவரின் குரல் சோனியா காந்தியின் குரல் போன்று இருந்ததால் சோனியா தான் பேசினார் என்று வாஹனவதி நினைத்துள்ளார். அதன் பிறகு தான் அவருக்கு உண்மை தெரிய வந்துள்ளது. இதையடுத்து இது குறித்து டெல்லி போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் அந்த பெண் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அந்த பெண் சட்ட அதிகாரி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரின் தூண்டுதலின்பேரில் போன் செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.