ஒரே பதவி.. ஒரே ஓய்வூதியம்... ஓரிருநாளில் முடிவை அறிவிக்கிறது மத்திய அரசு
டெல்லி: ஒரே பதவி.. ஒரே ஓய்வூதியம் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராடி வரும் முன்னாள் ராணுவத்தினரின் கோரிக்கையை ஏற்று முடிவை ஓரிருநாளில் மத்திய அரசு அறிவிக்கும் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, 1996-க்கு முன்பு ஒய்வு பெற்றவர்கள், 1996-2005 வரை, 2006-2008 வரை ஓய்வு பெற்றவர்கள் என பிரித்து ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
2008-க்கு பிறகு ஓய்வு பெற்றவர்கள் அதிக ஓய்வூதியம் பெறுகின்றனர் என்பது குற்றச்சாட்டு. இதனால் ஒரே பதவி...ஒரே ஓய்வூதியம் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
இந்த கோரிக்கையை 2014-ம் ஆண்டு அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஏற்றுக் கொண்டு இடைக்கால பட்ஜெட்டிலும் அறிமுகம் செய்தார். இதற்காக ரூ.500 கோடி ராணுவ ஓய்வூதியக் கணக்கில் சேர்க்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
ஆனால் 2014-15-ல் இது நடைமுறைக்கு வரவில்லை. இதனால் முன்னாள் ராணுவ வீரர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு பல கட்டப் பேச்சுவார்த்தையையும் நடத்தி வருகிறது.
இதனிடையே இது தொடர்பாக திட்ட வரைவு அறிக்கையை மத்திய அரசு தயாரித்து வருவதாகவும் இதை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அறிவிப்பு ஓரிருநாளில் வெளியாகும் என்றும் மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.