மற்ற நாடுகள் உளவு பார்ப்பதைத் தடுக்க... மத்திய அரசு அலுவலகங்களில் ஜி மெயில் பயன்படுத்த தடை
டெல்லி : மத்திய அரசு அலுவலகங்களில் ஜிமெயில், யாஹூ மெயில் போன்றவற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்கப் பட்டுள்ளது.
கடந்த மாதம் 18ம் தேதி மத்திய அரசின் சார்பில் அனைத்து துறைகளுக்கும் நோட்டீஸ் ஒன்று அனுப்பப் பட்டது. அதில், இந்திய அரசின் இ-மெயில் கொள்கை என்று பெயரிடப்பட்ட அந்த நோட்டீசில், நாட்டின் தொழில்நுட்ப வளங்களை பயன்படுத்துவது குறித்து எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளின் படி, அரசு தொடர்பான எந்த ஒரு தொடர்புகளையும் 'நிக்' வழங்கும் இ-மெயில் சேவையை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், மத்திய அரசு அலுவலகங்களில் தனியார் நிறுவனங்களான ஜி மெயில் மற்றும் யாஹு மெயில் போன்ற நிறுவனங்களின் மெயில் சேவையை பயன்படுத்த தடை விதிக்கப் பட்டுள்ளது.
தனியார் இ-மெயில்களான ஜி மெயில் மற்றும் யாஹு மெயில் போன்றவற்றின் சர்வர்கள் வெளிநாடுகளில் உள்ளதால், அதை பயன்படுத்தி அமெரிக்க அரசு இந்திய அரசின் செயல்பாடுகளை வேவு பார்த்தது. இந்த வேவு பார்த்தலை தடுக்கவே தனியார் இ-மெயில்களை பயன்படுத்த மத்திய அரசு தடை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதே போல் அரசு தகவல் தொடர்பு நெட்வொர்க்கை பயன்படுத்தி, சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் மிரட்டல், வெறுப்பேற்றுதல், ஆபாசம், அத்துமீறல் போன்ற கருத்துகள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடுவதை தடுக்கும் பொருட்டும் உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, மத்திய அரசு நிறுவனங்களின் கணிணிகள் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.