மாரடைப்பில் துடித்தபோதும் 80 பயணிகளின் உயிரைக் காத்த பிறகு மரணித்த அரசு பஸ் டிரைவர்
திருப்பதி: தமிழக அரசு போக்குவரத்துக்கழக பேருந்து ஓட்டுனர் ஒருவர், மாரடைப்பு ஏற்பட்டபோதிலும் தன்னுயிரை இழந்து, 80 பயணிகளின் உயிரை காப்பற்றிய நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கீழ்முதலம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். அரசு பேருந்து ஓட்டுனரான இவர், திருப்பதியில் இருந்து சென்னை நோக்கி அரசு பேருந்தை ஓட்டி வந்துள்ளார். ஆந்திர மாநிலம் தடாவிற்கு பேருந்து வந்தபோது ஓட்டுனர் சிவக்குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
வலியால் துடித்துக் கொண்டிருந்த சிவக்குமார், சாதுர்யமாக பேருந்தை ஓட்டி சாலையோரம் நிறுத்தியுள்ளார். இதை பார்த்த பயணிகள், ஓட்டுனரை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே ஓட்டுநர் சிவக்குமார் உயிரிழந்தார்.
பேருந்தில் இருந்த 80 பேரின் உயிரை காப்பாற்றி, மாரடைப்பால் தன்னுடைய உயிரை இழந்த ஓட்டுநர் சிவக்குமாரின் மரணம், பயணிகள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.