கருப்புப் பணத்தில் ஒரு பைசாவைக் கூட உங்களால் திருப்பி கொண்டு வர முடியாது- சரத் யாதவ்
டெல்லி: இந்தியாவால் எந்த ஒரு காலத்திலும் வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்கவே முடியாது என்று ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத் யாதவ் உறுதியாகக் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற ராஜ்யசபாவில் நேற்றைய விவாதத்தின் போது சரத் யாதவ் பேசியதாவது:
கருப்புப் பணம் தொடர்பான இந்த விவாதம் சலிப்பை ஏற்படுத்துகிறது. உங்களைப் பொறுத்தவரையில் வெளிநாட்டில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தில் ஒரு பைசாவைக் கூட உங்களால் திருப்பி கொண்டு வர முடியாது என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.
கருப்பு பணத்தை எளிதாகக் கொண்டு வந்துவிடுவதற்கு இது ஒன்றும் ஐரோப்பாவோ அல்லது அமெரிக்காவோ அல்ல.. இந்தியாவைப் பொறுத்தவரையில் கருப்புப் பணத்தைக் கொண்டுவரவே முடியாது. நமது நிதி அமைச்சர் அற்புதமானவர்.. இந்த நீண்ட விவாதத்தின் முடிவில் பதில்களுடன் வருவார்.
இந்த நாட்டில் 200 கோடி கைகளுக்கு வேலை வாய்ப்பு இல்லை.. அவர்களுக்கு வேலை வாய்ப்பைக் கொடுங்கள்.. கருப்புப் பணத்தைக் கொண்டு வருவோம் என்றெல்லாம் வாக்குறுதி கொடுக்காதீர்..
தேர்தல் களத்தில் கருப்புப் பணத்தை புழங்கவிடுவதன் மூலம் நமது அரசியல் சாசனத்தையும் ஜனநாயகத்தையும் விற்றுக் கொண்டிருக்கிறோம்.
இவ்வாறு சரத் யாதவ் பேசினார்.
இதேபோல் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேசியதாவது:
நாடு விடுதலை அடைந்த பின்னர் ஆட்சி செய்த அரசுகள் அனைத்துமே கருப்புப் பணத்தை கொண்டுவருவதற்கான பொறுப்பேற்க வேண்டும். குறிப்பாக முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் கருப்புப் பணத்தை மீட்பது குறித்து வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
இதனை தற்போது பாரதிய ஜனதா அரசு தமக்கு சாதகமான ஒன்றாக எடுத்துக் கொண்டிருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி 100 நாட்களில் கருப்புப் பணத்தை மீட்டுவிடுவோம் என்று வாக்குறுதி கொடுத்தது. ஆனால் 6 மாதங்கள் ஓடிவிட்டது.. இதுவரை கருப்புப் பணத்தை மீட்கவில்லையே..
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானது வறுமையை விரட்டுவோம் என்று எப்படி பொய்யான வாக்குறுதியை அளித்ததோ, அதேபோல்தான் பாஜகவின் வாக்குறுதியும் பொய்யானது. கருப்புப் பணத்தைப் பதுக்கியிருக்கும் தொழிலதிபர்கள்தான் கட்சிகள் அதிகாரத்தைக் கைப்பற்றவும் உதவுகின்றன.
காங்கிரஸைப் போல பாஜகவும் கருப்புப் பண விவகாரத்தில் தீவிர அக்கறை காட்டவில்லை. பாஜகவைப் பொறுத்தவரையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்ததுடன் மட்டுமே அதன் பணி முடிவடைந்துவிடவில்லை.
இவ்வாறு மாயாவதி பேசினார்.