30 வருடமாய் பயன்படுத்தப்படாத நுகர்வோர் சட்டத்தைத் தூசி தட்டி "மேகி" மீது போடப் போறாங்களாம்!
டெல்லி: இந்தியாவில் தடை செய்யப்பட்ட மேகி நூடுல்ஸின் மீது 30 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்த நுகர்வோர் சட்டத்தினைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளில் அளவுக்கு அதிகமாக காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட்டும் சேர்க்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தது. இதைத் தொடர்ந்து மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்கள் மீது பல்வேறு மாநிலங்கள் ஆய்வக சோதனை மேற்கொண்டன.
அப்போது அவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயன பொருட்கள் அதிகம் சேர்க்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் நூடுல்ஸ்கள் பாதுகாப்பற்றவை மற்றும் மனிதர்களுக்கு தீங்கு விளைவிப்பவை என்றும் கூறி மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் (எப்.எஸ்.எஸ்.ஐ) நாடு முழுவதும் தடை செய்தது.
இந்நிலையில் சட்டம் இயற்றப்பட்டு 30 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாத நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்பிரிவான Section 12-1-D முதல் முறையாக நெஸ்லே நிறுவனம் மீது பயன்படுத்தி தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குறிப்பிட்ட சட்ட பிரிவை பயன்படுத்தி மத்திய அரசால் நேரடியாக தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தொடர முடியும்.
முறையற்ற வியாபார முறைகளில் மற்றும் தவறான விளம்பரங்கள் ஆகிய குற்றசாட்டுகள் அடிப்படையில், பொது மக்கள் சார்பாக மேகியின் தாய் நிறுவனமான நெஸ்லே மீது வழக்கு தொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதுவரை நுகர்வோர் தான் நுகர்வோர் பாதுகாப்பு சட்டதை பயன்படுத்தி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.