ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்று வழித்தடத்தில் சேதுசமுத்திர திட்டம்: லோக்சபாவில் 'பொன்னார்'
டெல்லி; ராமர் பாலத்தை இடிக்காமல் மாற்று வழித்தடத்தில் சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது என்று லோக்சபாவில் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இலங்கையைச் சுற்றி கப்பல்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் பாக் ஜலசந்தியில் கடலை ஆழப்படுத்தி கப்பல்களை இயக்குவதற்காக சேது சமுத்திரத் திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் பாக் ஜசலசந்தியில் ஆதாம் பாலம் எனப்படுகிற ராமர் பாலம் புனிதமானது; அதனை இடிக்காமல் சேதுக்கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வழக்கு உச்சநீதிமன்றத்துக்குப் போனது.
ராமர் பாலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், மாற்றுப் பாதை வழியே சேதுசமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து ஆராயுமாறு அறிவுத்தியிருந்தது.
இதனைத் தொடர்ந்து ரயில் ஆர்.ஐ.டி.இ.எஸ் என்ற ஆய்வு அமைப்பு மாற்றுவழி குறித்து ஆராய்ந்து இம்மாதத்தின் தொடக்கத்தில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. இது தொடர்பாக லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஆர்.ஐ.டி.இ.எஸ் தனது ஆய்வு அறிக்கையை கொடுத்துள்ளது. அதில் சேதுசமுத்திரம் திட்டத்துக்கான மாற்றுப் பாதை குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசும் சேதுசமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் இயக்குவது குறித்து ஆராய்ந்து வருகிறது என்றார்.