வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய காலக்கெடு ஆக., 5 வரை நீட்டிப்பு - வருமான வரித்துறை
டெல்லி: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால கெடு அடுத்த மாதம் 5 ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
வருமான வரி வரம்புக்குள் வரும் நபர்கள் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 31-ந் தேதிக்குள் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதன்படி, 2016-17-ம் மதிப்பீடு ஆண்டிற்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளை மறுதினம் (31-ந்தேதி) முடிவடைகிறது.
பொதுவாக வருமான வரி செலுத்துவோரில் பெரும்பாலானோர் கடைசி நேரத்தில் கணக்கு தாக்கல் செய்வதை வழக்கமாக கொண்டு உள்ளனர். இந்நிலையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால கெடு நீட்டிக்கப்பட்டுளளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜம்மு-காஷ்மீர் பிரச்சனை மற்றும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் ஆகஸ்ட்.5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.