அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அரசுக்கு 2019 வரை அவகாசம் உள்ளது - ஆர்.எஸ்.எஸ்
லக்னோ: வரும் 2019ம் ஆண்டுக்குள் அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்டுவதற்கு மத்திய அரசிற்கு போதுமான கால அவகாசம் உள்ளது. அதுகுறித்து அது வாக்குறுதி அளித்துள்ளது. அதற்கேற்ப அது செயல்படும் என்று ஆர்.எஸ்.எஸ். தெரிவித்துள்ளது.
ஆர்.எஸ்.எஸ்.ன் அகில பாரதிய காரியதரிசிகளின் மூன்று கூட்டம் தொடங்கியுள்ளது. முதல்நாளான இன்று, கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்னதாக ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தின் இணைப் பொதுச் செயலாளரான தத்தாத்ரியா ஹோசாபெலே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, லவ் ஜிகாத் உள்ளிட்ட செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது :-
அயோத்தியில் ராமர் கோவிலைக் கட்ட வேண்டும் என்பது தேசத்திற்கான கடமைகளில் ஒன்று. இது தொடர்பாக விஎச்பி மற்றும் பிற மதத் தலைவர்களின் கருத்துக்களுக்கு நாங்கள் ஆதரவளிக்கிறோம் என அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசிடம் ஆர்.எஸ்.எஸ். ராமர் கோவிலைக் கட்டும் படி வலியுறுத்துமா என்ற கேள்விக்கு, ‘ஏற்கனவே, அது தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற்றிருக்கிறது. இதுதொடர்பாக அவர்கள் திட்டமிட்டு செயல்படுவார்கள். 2019 வரை அவகாசம் உள்ளது' என்றார்.
இந்தியாவிற்கு அல்கொய்தா அல்லது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதத் தாக்குதல் அச்சம் இருப்பதாக வெளியான தகவல் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘இன்றைய கூட்டத்தில் நாங்கள் அது குறித்து விரிவாக ஆலோசிக்க உள்ளோம்' என்றார்.
அப்போது லவ் ஜிகாத் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ‘இது குறித்து ஏற்கனவே கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பேசி விட்டோம்' எனப் பதிலளித்தார்.
இன்றைய கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.