இல்ல இல்ல ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்கலே! - 'கருத்தை' வாபஸ் பெற்றார் அஜீத் சிங்
டெல்லி: பெரும் நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு தரும் எண்ணமில்லை என்று மத்திய அமைச்சர் அஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் பெருகி வரும் நிர்வாக செலவுகளும், லாபமற்ற வர்த்தக நடைமுறைகளையும் கருத்தில் கொண்டு இந்நிறுவனம் தனியார் வசம் அளிக்கப்படலாம் என்று சமீபத்தில் சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் அஜித் சிங் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்க் கட்சினரிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதைத் தொடர்ந்து ஏர் இந்தியாவைத் தனியார் மயமாக்கும் எண்ணம் அரசுக்கு கிடையாது என்று நேற்று மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மறுப்பு
அதில், "ஏர்-இந்தியா நிறுவனத்தை தொடர்ந்து நடத்துவதில் அரசுக்கு நிறைய சவால்கள் உள்ளன. விமானப் போக்குவரத்து வர்த்தகம் என்பது கடுமையான போட்டிகள் நிறைந்த ஒன்று என்பதை அந்நிறுவனத்தின் நிர்வாகமும், ஊழியர்களும் புரிந்து கொள்ளவேண்டும்.
திட்டமிட்டபடி, இந்த வருடத்தில் ஏர் இந்தியாவுக்கு அளிக்கப்படும் ரூ 32,000 கோடியைத் தவிர மேற்கொண்டு அந்நிறுவனத்திற்கு அரசின் நிதி உதவி கிட்டாது. அவர்களே சமாளிக்கத் தெரிந்து கொள்ளவேண்டும்.
மூலதனம் அதிகம் தேவைப்படும் இந்த வர்த்தகத்தின் லாபங்கள் மிகவும் குறைவாக இருக்கிறது.
மற்றபடி, இந்த நிறுவனத்தை தனியாருக்கு விற்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. முன்பு நான் கூறியது எனது தனிப்பட்ட கருத்தே," என்று தெரிவித்துள்ளார்.
பாஜக எதிர்ப்பு
முன்னதாக அமைச்சரின் தனியார்மய கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. "சிவில் விமானப் போக்குவரத்துக் கொள்கை ஒன்றினை நடைமுறைப்படுத்தாமல் பொது சொத்தினை விற்க முயற்சிப்பதாகவும், ஒரு நுணுக்கமான மற்றும் தீவிரமான பிரச்சினையான இது குறித்து அரசாங்கம் முறையான விவாதங்களை மேற்கொண்டு எதிர்க்கட்சியினரின் கருத்துகளையும் கேட்டறிதல் வேண்டும் என்றும் பிஜேபி கட்சியின் மூத்த தலைவரான ரவி ஷங்கர் பிரசாத் தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட்
தேசிய நலன்களுக்கு எதிரான ஒரு பேரழிவு நடவடிக்கையை எடுக்க வேண்டாமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் டி.ராஜா கூறினார். மேலும், "உள்நாட்டு விமானப் போக்குவரத்துக் கொள்கையை கொண்டு வருவதாக அரசு தெரிவித்திருந்தபோதிலும் இன்னும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. கோடிக்கணக்கான தொகை செலவிடப்பட்டு சென்னை, கொல்கத்தா விமான நிலையங்கள் சீரமைக்கப்பட்டு பின்னர் தனியார்வசம் விடப்பட்டுள்ளது சரிதானா," என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் சொத்து
"ஏர்-இந்தியா நிறுவனம் அமைச்சர்கள் குழுவின் சொத்தல்ல, இந்திய மக்களின் சொத்து," என்று இந்திய தொழிற்சங்க சிபிஎம் இணைந்த தொழிற்சங்க மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.