வைதிக்- சயீத் சந்திப்பு.. திரித்து திசை திருப்ப முயல்கிறது காங்கிரஸ்- சுஷ்மா
டெல்லி: வேத் பிரகாஷ் வைதிக் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாத தலைவர் ஹபீஸ் சயீத் ஆகியோர் சந்திப்புக்கும், மத்திய அரசுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. எங்களுக்கும், இந்த சந்திப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் காங்கிரஸ் கட்சி இதைத் திரித்து மக்களை திசை திருப்பப் பார்க்கிறது என்று கூறியுள்ளார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்.
இதுகுறித்து லோக்சபாவில் இன்று அவர் அளித்த விளக்கத்தின்போது, இது காங்கிரஸ் கட்சியின் பிரித்தாளும் தந்திரமாகும். இந்த சந்திப்புக்கும், அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை, சம்பந்தமும் இல்லை.
மத்திய அரசு அல்லது பாஜக சார்பில் வேத் பிரகாஷ் வைதிக், சயீத்தை சந்திக்கவில்லை. சந்திக்குமாறு அவர் கேட்டுக் கொள்ளப்படவும் இல்லை.
இது அவரது தனிப்பட்ட பயணமாகும். தனிப்பட்ட சந்திப்பாகும். மத்திய அரசு மீது காங்கிரஸ் பழி சுமத்துவது தவறானது, துரதிர்ஷ்டவசமானது என்றார் சுஷ்மா.
நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில், மக்களைத் திசை திருப்ப காங்கிரஸ் முயல்கிறது. இதன் மூலம் மத்திய அரசுக்கும், பாஜகவுக்கும் எதிரான பிரசாரத்தை அது தூண்டி விட்டுள்ளது என்றார்.
"ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கும், வைதிக்குக்கும் தொடர்பி்ல்லை"
இதற்கிடையே சமீபத்தில் ஆர். எஸ்.எஸ். அமைப்பிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவரான ராம் மாதவ் கூறுகையில், வைதிக், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் அல்ல. அவருக்கும், அமைப்புக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.
இவர் மணிசங்கர அய்யர், சல்மான் குர்ஷித் போன்றோருடன் சுற்றுபவர். அவருக்கும், ஆர்எஸ்எஸ்ஸுக்கும் இடையே எப்படி தொடர்பு இருக்க முடியும்.
ஆனால் ஹபீஸ் சயீத் ஒரு தீவிரவாதி. இந்தியாவைப் பொறுத்தவரை அவர் குற்றவாளி. அதை யாரும் மறுக்க முடியாது என்றார் அவர்.
முன்னதாக வைதிக் ஒரு ஆர்எஸ்எஸ் காரர் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.