நாடு முழுவதும் இலவச நீரிழிவு பரிசோதனை – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் திட்டம்!
டெல்லி: இந்தியா முழுவதும் நீரிழிவு நோயாளிகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை நடத்த மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.
இது குறித்து அவர், "இன்று இந்தியா முழுவதிலும் சர்க்கரை நோய் பரவலாக காணப்படுகிறது. இதில் உலக அளவில் சீனா முதல் இடத்தில் உள்ளது. அடுத்து 2 ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது.
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி விவரத்தின்படி இந்தியாவில் 6 கோடியே 70 லட்சம் நீரிழிவு நோயாளிகள் இருப்பது தெரிய வந்துள்ளது. சீனாவில் 9 கோடியே 20 லட்சம் மக்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இந்நிலையில் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான இந்த திட்டத்தின் மூலம் இந்த நோயால் ஏற்படக் கூடிய சிறுநீரக செயல் இழப்பு, கண்பார்வை இழத்தல் போன்றவற்றை சுலபமாக சமாளிக்க கூடிய நிலை உருவாக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.