நோயாளிக்கு சிகிச்சை அளிக்க தாமதம்.. டாக்டரை பந்தாடிய உறவினர்கள்.. பரபர சிசிடிவி காட்சிகள்
நோயாளிக்கு சிகிச்சை அளிக்க தாமதமான காரணத்தால் டாக்டர் ஒருவரை நோயாளிகளின் உறவினர்கள் தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை: நோயாளிக்கு சிகிச்சை அளிக்க தாமதமான காரணத்தால் டாக்டர் ஒருவரை நோயாளிகளின் உறவினர்கள் தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்ட்ராவின் துலே பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு கடந்த 12ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிக்கு, சிகிச்சை அளிக்க டாக்டர் காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் நோயாளியின் உறவினர்கள் டாக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்பின் இது கைகலப்பில் முடிந்துள்ளது. அப்போது நோயாளிகளின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து டாக்டரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலினால் டாக்டரின் முகம், கண், மார்பு உள்ளிட்ட பல பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் டாக்டரின் கண் பார்வையில் குறைபாடும் ஏற்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து டாக்டருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து துலே காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், டாக்டரை தாக்கிய 9 பேரும் அடையாளம் காணப்பட்டு , கைது செய்துள்ளோம். மேலும் அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதற்கிடையே , டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து துலே பகுதியில் மருத்துவ பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் டாக்டர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.