அகமது மரணமடைந்த தகவலை தாமதமாக வெளியிட்டது மத்திய அரசு: கார்கே பகீர் குற்றச்சாட்டு
டெல்லி: முன்னாள் அமைச்சர் அகமது மறைந்த தகவலை வேண்டுமென்றே தாமதமாக மத்திய அரசு வெளியிட்டுள்ளது என்று லோக்சபா காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் நேற்று தொடங்கியது. குடியரசு தலைவர் உரையின்போது கேரள மாநிலம் மலப்புரம் தொகுதி லோக்சபா எம்.பி இ.அகமது (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) திடீரென மயங்கி சாய்ந்தார். இந்நிலையில் அவர் இன்று அதிகாலை 2.15 மணியளவில், மருத்துவமனையில் உயிரிழந்தார். மாரடைப்பால் அகமது உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பட்ஜெட் தாக்கல் செய்வதை தள்ளிப்போட சில எம்.பிக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இன்றே பட்ஜெட் தாக்கல் செய்வது என்று அரசு உறுதியாக உள்ளது. இந்த சூழ்நிலையில், மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், அகமது இறந்த தகவலை தாமதமாக மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்பதற்காக அரசு இவ்வாறு செய்துள்ளது. இது ஒரு மனிதாபிமானமற்ற செயல்.
கேரளாவுக்கு விரைவில் சென்று, அங்குள்ள அரசியல் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி, இந்த பிரச்சினையை கிளப்ப திட்டமிட்டுள்ளேன். மார்ச் 31ம் தேதி என்றாலும் கூட பரவாயில்லை. இப்போது பிப்ரவரிதான் ஆகிறது என்பதால் பட்ஜெட் தாக்கல் செய்ய நிறைய கால அவகாசம் உள்ளது. பெரும்பாலான எம்.பிக்களும் பட்ஜெட்டை தள்ளிப்போடுவதையே விரும்புகிறோம். இவ்வாறு கார்கே தெரிவித்தார். அகமது சிகிச்சை பெறும்போது அவரது குடும்பத்தாரை சந்திக்க விடாமல் மருத்துவமனை நிர்வாகம் முட்டுக்கட்டை போட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கார்கேவின் குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெறுகிறது.