மோசடித் திருமணங்களைத் தடுக்க... மேட்ரிமோனியல் சைட்களில் அடையாளச் சான்றை கட்டாயமாக்கும் மத்திய அரசு!
ஜெய்ப்பூர்: திருமணம் என்ற பெயரில் மோசடிகள் நடைபெறாமல் தடுக்க, இனி இணையத்தள திருமணத்தகவல் மையங்களில் பதிவு செய்வோர், தங்களது அடையாள அட்டையை ஆதாரமாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய வழிமுறையை மத்திய அரசு கொண்டுவரவுள்ளது.
மணமகனையோ அல்லது மணமகளையோ நேரில் பார்க்காமல், உலகத்தின் ஏதோ மூலையில் இருக்கும் அவர்களுடன் திருமணத்தை நடத்தி வைக்கும் வேலையைப் பார்த்து வருகின்றன திருமண தகவல் மைய இணையதளங்கள்.
இணையத்தில் உள்ள தகவல்களின் அடிப்படையில் நடைபெறும் இத்திருமணங்களில் பல பின்னாளில் பெரும் மோசடிகளில் முடிந்த சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. ஏமாற்றுக்காரர்கள் சிலர் இதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தங்களைப் பற்றி தவறான தகவல்களைத் தந்து விடுகின்றனர்.
கேள்விக்குறியாகும் எதிர்காலம்...
இத்தகைய திருமணங்களால் மணமகன் அல்லது மணமகள் என யாராவது ஒரு தரப்பு பெரும் ஏமாற்றத்தைச் சந்திக்கின்றது. இதனால் அவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி விடுகிறது. திருமண உறவுகளும் பாதிக்கப்படுகின்றன.
அடையாள அட்டை கட்டாயம்...
எனவே, அத்தகைய விரும்பத்தகாத சம்பவங்களைத் தடுக்க, இணையதள திருமண தகவல் மையங்களில் பதிவு செய்வோர் இனி அடையாள அட்டைத் தரும் முறையை கட்டாயமாக்குகிறது மத்திய அரசு.
மேனகா காந்தி...
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது இந்தத் தகவலை அவர் தெரிவித்துள்ளார்.
மறுசீரமைப்பு...
விரைவில் இணையதள திருமண தகவல் மையங்களை மறுசீரமைப்பு செய்ய இருப்பதாகவும், அடுத்த மாதத்திற்குள் அதன் பணிகள் முடிவடையும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார். இதன் மூலம் மோசடித் திருமணங்கள், ஏமாற்று வேலை போன்றவை தடுக்கப்படும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
ஆதார் அட்டை...
அதன்படி, திருமணத்திற்காக இணையதளத்தில் விண்ணப்பிப்பவர்கள் தங்களது ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை தரலாம். வேறு நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தால் பாஸ்போர்ட்டை அடையாள அட்டையாக சமர்ப்பிக்க வேண்டும்.
சரிபார்ப்பு...
அதில் உள்ள புகைப்படமும், விபரங்களும் உண்மை தானா என சம்பந்தப்பட்ட அலுவலங்களைத் தொடர்பு கொண்டு திருமணத் தகவல் மையம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.