அடுத்த ஓட்டு 'பொறி' மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயருகிறது!
மத்திய அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்படுவது வழக்கம். ஜூலை மாதம் அறிவிக்கப்பட வேண்டிய இந்த அகவிலைப்படி உயர்வு இன்னமும் வெளியாகவில்லை.
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களைக் கவரும் வகையில் அதிரடியாக அகவிலைப்படி உயர்வை அறிவிக்க முடிவு செய்திருக்கிறது மத்திய அரசு. அதுவும் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் 10% அளவு என்ற இரட்டை இலக்க அகவிலைப்படியை வழங்க திட்டமிட்டிருக்கிறது.
இதன் மூலம் 50 லட்சம் அரசு ஊழியர்களும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்படுவர்.
இது லோக்சபா தேர்தலில் கை கொடுக்கும் என்பது காங்கிரசின் கணக்கு. ஏற்கெனவே உணவு பாதுகாப்பு சட்டம், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் போன்ற வாக்காளர்களைக் கவரும் வகையில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் நீட்சியாக இந்த அகவிலைப்படி உயர்வு அறிவிப்பும் வெளியாக உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை மறுநாள் வெளியாகக் கூடும்.