பெட்ரோல் விலையை 'பீட்' செய்த வெங்காய விலை.. பதுக்கலைத் தடுக்க அரசுகளுக்கு உத்தரவு!
டெல்லி: வெங்காய விலை மீண்டும் 100 ரூபாய்க்கு விற்கத்தொடங்கியுள்ளது. இது நமது பெட்ரோல், டீசல் விலையை விட அதிகமாகும். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், வெங்காயத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளதால் சீனா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யலாமா என மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
இந்தியா முழுவதும் மாதம் ஒன்றுக்கு 9 முதல் 10 லட்சம் டன் வெங்காயம் தேவையாக உள்ள நிலையில், அதில் பாதி அளவுதான் வெங்காய சப்ளை உள்ளதாகவும், இதனால்தான் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதாகவும் மொத்த வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
வரத்து குறைவினால் கடந்த ஓரிரு வாரங்களாக இலேசாக குறைந்திருந்த வெங்காயத்தின் விலை, தற்போது மீண்டும் உயரத்தொடங்கி உள்ளது.
சென்னையில் கிலோ ரூ. 70க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் 100, சண்டிகர் மற்றும் போபாலில் 80 என விற்பனை செய்யப்படுகிறது. பெங்களூரில் மட்டும்தான் ஓரளவு குறைவாக கிலோ ரூ. 60 க்கு விற்கப்படுகிறது.
விலை உயர காரணம்
குறிப்பாக மகாராஷ்ட்ராவின் லசால்கானில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய மொத்த விற்பனை சந்தையில், வெங்காயத்தின் விலையில் ஏற்பட்ட விலை உயர்வே, சில்லரை விற்பனையில் ஏற்பட்ட விலை உயர்வுக்கு காரணம் எனக்கூறப்படுகிறது.
இந்த சந்தைக்கு மகாராஷ்ட்ராவில் விளைவிக்கப்படும் வெங்காயம்தான் கொண்டுவரப்படும்.
விளைச்சல் பாதிப்பு
நாட்டின் ஒட்டுமொத்த வெங்காய தேவையின் 25 சதவீதத்தை மகாராஷ்ட்ரா மாநிலம்தான் பூர்த்தி செய்கிறது. ஆனால் இந்த ஆண்டு அங்கு வெங்காய விளைச்சலில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே சப்ளையை பாதித்துள்ளது. காலம் தவறி பெய்த மழையால் வெங்காய பயிர்கள் சேதமடைந்ததாலேயே இந்த நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வெங்காயம் அதிகம் விளைவிக்கும் குஜராத், கர்நாடகா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது.
விளைச்சல் சரியாக இருந்திருந்தால் 'கரீஃப்' பருவ வெங்காய அறுவடை செப்டம்பர் மாத இறுதியிலிருந்தே சந்தைக்கு வர தொடங்கிவிடும். அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய மாதங்களில் வரத்து உச்சத்தில் இருக்கும்.
வெளிநாட்டு வெங்காயம்
இந்நிலையில் விரைவிலேயே ஐந்து மாநில சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வெங்காய விலை உயர்வு அரசியல் பிரச்னையாகவும் உருவெடுக்கும் என்பதால், மத்திய அரசு இது குறித்து கவலையடைந்துள்ளது.
இதன் காரணமாகத்தான் விலை உயர்வை தடுக்க சீனா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யலாமா என மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
பதுக்கலை தடுக்க
கடந்த செப்டம்பர் மாதம் வெங்காயத்தின் விலையில் ஏற்பட்ட 323 சதவீத உயர்வும், அந்த மாதத்தில் ஏற்பட்ட பணவீக்க உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது. அதுமட்டுமல்லாது இந்த மாத கடைசி வாக்கில் வெங்காயத்தின் விலை மேலும் உயரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனால் வெங்காயம் அதிகம் பயிரிடப்படும் மகாராஷ்ட்ரா, குஜராத், கர்நாடகா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெங்காயத்தை பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய உணவுத் துறை அமைச்சர் கே.வி. தாமஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஏற்றுமதிக்குத் தடை
இதனிடையே வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் மற்றொரு நடவடிக்கையாக வெங்காய ஏற்றுமதியை தடை செய்வது குறித்தும் மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.