முத்தலாக் முறையை மாற்றாவிட்டால் மத்திய அரசு சட்டம் கொண்டு வரும்.. வெங்கய்யா நாயுடு திட்டவட்டம்
முத்தலாக் நடைமுறையை மாற்றாவிட்டால் மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வர நேரிடும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.
டெல்லி: முத்தலாக் நடைமுறையை மாற்ற இஸ்லாமியர்கள் முன்வராவிட்டால், அதனை தடை செய்து மத்திய அரசு சட்டம் இயற்ற நேரிடும் என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த திருமணம் ஆன ஒரு ஆண், தனது மனைவியை விவாகரத்து செய்வதற்கு மூன்று முறை தலாக் (முத்தலாக்) கூறும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.
இதற்கு எதிராக இஸ்லாமிய பெண்கள் அமைப்பினர் நாடு முழுவதும் போராடி வருகின்றனர். இது தொடர்பாக ஏராளமான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டன. ஆனால் முத்தலாக் முறை சரியானதே என முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் வாதிட்டு வருகிறது.
முத்தலாக் தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி கேஹர் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. 'முத்தலாக்' விவாகரத்து நடைமுறைக்கு எதிரான வழக்குகளில் இருதரப்பு வாதத்தையும் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இது குறித்து வெங்கய்யா நாயுடு கூறுகையில், சட்டத்தின் முன் நாட்டில் உள்ள அனைவரும் சமம். இந்து சமயத்தில் இருந்த மூடப்பழக்கங்களை அகற்ற சட்ட இயற்றப்பட்டது போல் முத்தலாக் நடைமுறையை மாற்ற இஸ்லாமியர்கள் முன்வரவேண்டும். இல்லையென்றால் அதனை தடை செய்து மத்திய அரசு சட்டம் இயற்ற நேரிடும் என்று அவர் கூறியுள்ளார்.