ஈராக்கில் தீவிரவாதிகளிடம் சிக்கிய 39 இந்தியர்களும் பலியா? உறவினர்கள் கொதிப்பு
ஈராக்கில் காணாமல் போன 39 இந்தியர்களின் உண்மை நிலை என்ன என்பதை பற்றி மத்திய அரசு இதுவரை விளக்கம் அளிக்காததால், அவர்களின் உறவினர்கள் மத்திய அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
டெல்லி: ஈராக்கில் ஐஎஸ் மற்றும் அரசுப்படைகளுக்கும் இடையே நடந்த சண்டையின்போது 39 இந்தியர்கள் காணாமல் போயினர். அவர்களின் தற்போதைய உண்மை நிலை குறித்து மத்திய அரசு இதுவரை விளக்கம் அளிக்காததால், உறவினர்கள் மத்திய அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
ஈராக் நாட்டில், மொசூல் உள்ளிட்ட கணிசமான பகுதிகளை ஐஎஸ் தீவிரவாதிகள், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக, ஆக்கிரமிப்பு செய்தனர். அப்போது, அங்குள்ள பொதுமக்களை சித்ரவதை செய்து, கொடூரமாகக் கொலை செய்வதை ஐஎஸ் தீவிரவாதிகள் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.
அவர்களை, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சிரியா, ஈராக் அரசுப் படைகள் இணைந்து, போரிட்டு தற்போது விரட்டியடித்துள்ளன. ஐஎஸ் தீவிரவிதிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மொசூல் நகரம் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மொசூல் நகரில் இருந்த இந்தியர்களில், 39 பேரை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த 39 பேரும், மொசூலில் உள்ள பாதுஷ் என்ற சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருந்தனர் என்று கூறப்பட்டது.
இவர்களை காணாமல் போனவர்கள் என்ற அடிப்படையிலேயே, இந்திய வெளியுறவு அமைச்சகம், ஈராக் அரசுடன் இணைந்து, தேடுதல் பணிகளை மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் காணாமல் போன இந்தியர்களை கண்டுபிடித்துவிடுவோம் என, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் தொடர்ந்து கூறிவருகின்றனர்.
இதற்கிடையே, காணாமல் போன இந்தியர்கள் 39 பேரும் அடைத்து வைக்கப்பட்டிருந்த பாதுஷ் சிறைச்சாலை, ஐஎஸ் தீவிரவாதிகள், ஈராக் படைகளுக்கு இடையிலான போரின்போது, குண்டுவீசி தகர்க்கப்பட்டுவிட்டதாக, தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவலை உறுதி செய்யாமல், வேண்டுமென்றே வெளியுறவு அமைச்சகம் காலம் தாழ்த்தி வருவதாகவும், உண்மையில், அந்த 39 இந்தியர்களும் கொல்லப்பட்டதன் மூலமாக, சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தற்போது, காணாமல் போன நபர்களை பற்றிய உண்மை விவரத்தை வெளியிடும்படி, அவர்களின் குடும்பத்தினரும் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.