4,660 டன் பருப்பினை விற்கும் மத்திய அரசு - மக்களுக்கு தாராளமாக கிடைக்க நடவடிக்கை
டெல்லி: இந்தியாவில் 4 ஆயிரத்து 660 டன் பருப்பினை சந்தையில் மத்திய அரசு ஏலத்தின் மூலம் விற்பனை செய்துள்ளது. மக்களுக்கு பருப்பு தாராளமாக கிடைக்கிற வகையிலும், விலை குறையும் வகையிலும் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
பருப்பு விளைச்சலில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போதுமான மழை இல்லாததாலும், பருவம் தவறி பெய்த மழையாலும் பருப்பு உற்பத்தி பாதித்தது.
2013-14 பயிர் ஆண்டில் 1 கோடியே 92.5 லட்சம் டன் பருப்பு உற்பத்தி ஆனது. இது 2014-15 பயிர் ஆண்டில் 1 கோடியே 72 லட்சம் டன்னாக சரிவு அடைந்தது.
இதன் காரணமாக பருப்பு விலை வரலாறு காணாத வகையில் கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ துவரம் பருப்பு விலை ரூபாய் 225 என்ற உச்சத்தை தொட்டது. இதையடுத்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. நாடு முழுவதும் பதுக்கலுக்கு எதிரான நடவடிக்கையை முடுக்கி விட்டது.
இதன்மூலம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 828 டன் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டது. 12 ஆயிரத்து 506 இடங்களில் நடந்த சோதனைகளில் இந்த பருப்பு சிக்கியது. இதில் டெல்லி, ஒடிசா, கர்நாடகம், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 35 ஆயிரத்து 761 டன் பருப்பும் அடங்கும். இதனையடுத்து இவற்றை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.