சவுதியில் வேலையிழந்து தவிக்கும் 10,000 இந்தியர்களை திரும்ப அழைத்து வர ஏற்பாடு - சுஷ்மா உறுதி
டெல்லி: சவுதி அரேபியாவில் உணவு இன்றி பரிதவிக்கும் 10,000 இந்தியர்கள் விமானம் மூலம் தாய்நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உறுதியளித்துள்ளார்.
சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணியற்றி வருகின்றனர். எண்ணெய் வளமிக்க இந்த நாடுகளில் இயங்கி வரும் கட்டுமான நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் போன்றவற்றில் தொழிலாளர்களாக இவர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இதில் அதிகபட்சமாக சவுதி அரேபியாவில் மட்டும் 30 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வசிப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதைப்போல குவைத், கத்தார், ஓமன் போன்ற நாடுகளிலும் கணிசமான எண்ணிக்கையில் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
பொருளாதார வீழ்ச்சி
இந்த வளைகுடா நாடுகளின் வளர்ச்சிக்கு மூலகாரணமே எண்ணெய் வளம்தான். கச்சா எண்ணெயின் விலை மதிப்பை வைத்தே இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது.
சமீபகாலமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் பாதிப்படைந்து வருகிறது. அதிலும் சவுதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது.
|
வேலை இழப்பு
இதனால் இந்த நாடுகளில் இயங்கி வரும் மிகப்பெரிய நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த நிறுவனங்கள் தற்போது படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.
வேலையும், சம்பளத்தையும் இழந்த இந்தியர்கள் கடந்த பல நாட்களாக பசி, பட்டினியில் வாடி வருகின்றனர். கையில் பணம் இல்லாததால் நாடு திரும்ப முடியாமல் கடும் இன்னலில் சிக்கி உள்ளனர். இதனிடையே மத்திய அரசு உத்தரவின்பேரில் சவுதியின் ஜெட்டா நகரில் உள்ள இந்திய தூதரகம் சார்பில் 5 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட இந்திய தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரை சேர்ந்த சவுதி ஒகர் கட்டுமான நிறுவனத்தில் 50 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 4 ஆயிரம் பேர் இந்தியர்கள். அண்மைகாலமாக மத்திய கிழக்கு நாடுகளில் கட்டுமானத் தொழில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதனால் கடந்த 7 மாதங்களாக சவுதி ஒகர் நிறுவனம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. அன்றாட சமையலுக்கு தேவையான உணவுப் பொருட்களையும் அளிக்கவில்லை. இதனால் 4 ஆயிரம் இந்திய தொழிலாளர்களும் வேலையிழந்து உணவின்றி பரிதவித்து வந்தனர். சவுதியில் வேலையிழந்து தவிக்கும் 10,000 தொழிலாளர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
|
அமைச்சர் சுஷ்மா அறிவிப்பு
இந்தப் பிரச்சினை குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
சவுதி அரேபியாவில் ஒட்டு மொத்தமாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உணவின்றி பரிதவித்து வருகின்றனர். அவர்களுக்காக இந்தியத் தூதரகம் சார்பில் 5 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த முகாம்களில் 2,450 இந்திய தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த 4 நாட்களாக அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றன.
|
30 லட்சம் இந்தியர்கள்
பாதிக்கப்பட்ட இந்தியர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். அவர்கள் அனைவருக்கும் ஜெட்டாவில் இந்திய தூதரகம் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும். குவைத் நாட்டிலும் இந்திய தொழிலாளர்கள் வேலையிழந்து தவிப்பதாக தகவல்கள் வந்துள்ளன. எனினும் அங்கு நிலைமை கவலைப்படும் அளவுக்கு இல்லை.
சவுதியில் சுமார் 30 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். உணவின்றி தவிக்கும் உங்கள் சகோதர, சகோதரிகளுக்கு தாராளமாக உதவி செய்யுங்கள். இந்தியர்களின் மனஉறுதிக்கு முன்பு எதுவும் பெரிது இல்லை.
சவுதி அரேபியாவில் தவிக்கும் 10 ஆயிரம் இந்தியர்களையும் விமானம் மூலம் தாய்நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரகத்தில் தொழிலாளர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப் படும் புகைப்படங்களை சுஷ்மா ஸ்வராஜ் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக சவுதி அரேபியா, குவைத் அரசுகளுடன் இந்திய வெளி யுறவு அமைச்சகம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சில கட்டுமான நிறுவனங்கள் ஊழியர் களுக்கு சம்பளம் வழங்கவில்லை என்று புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் சட்டத்தை மீறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அந்த நிறுவனங்களுக்கு அபராதம், தண்டனை விதிக்கப்படும் என்று சவுதி அரேபியா அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.