செக் பவுன்சுக்கு 2 ஆண்டுகள் சிறை அல்லது இரு மடங்கு அபராதம்.. அதிரடி சட்டத்திற்கு மத்திய அரசு ரெடி
வங்கிக்கணக்கில் காசு இல்லாமல் காசோலை திரும்பி வந்தால் கடும் தண்டனை விதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக புதிய சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி: காசோலை மோசடி செய்து வருபவர்களுக்கு தண்டனை வழங்கும் விதமாக மத்திய அரசு புதிய சட்டத்திருத்தம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் வங்கி கணக்கில் பணம் இல்லாமல் காசோலை திரும்பி வந்தால் இரு ஆண்டுகள் சிறை அல்லது
இரு மடங்கு அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என தகவல வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக காசோலை மோசடி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. காசோலை பரிவர்த்தனைகளில் பெருமளவு மோசடி நடைபெறுகிறது.
அதை உரிய முறையில் பயன்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது என வியாபாரிகள் மத்திய அரசிடம் புகார் தெரிவித்துள்ளனர்.மேலும் காசோலை மோசடியால் பாதிக்கப்பட்டோர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்து பணம் வாங்குவதும்
கடினமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அரசின் திட்டப்படி ரொக்கமில்லா பரிவர்த்தனையை கையாள வசதியாக காசோலை பயன்பாட்டினை ஊக்குவிக்க வேண்டும். இதுதொடர்பாக ஏற்படும் பிரச்சனைகளை போக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய சட்டதிருத்தம்?
இந்நிலையில் காசோலை பணமின்றி திரும்புவதால் வணிகர்கள் தொழிலை மேற்கொள்ள முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அவர்களின் பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் புதிய சட்ட திருத்தம் கொண்டவர அரசு முடிவு செய்துள்ளது.
கடும் தண்டனை விதிக்க பரிசீலனை
அதன்படி மோசடி வழக்குகளில் சிக்குவோருக்கு கடும் தண்டனை விதிக்கும் வகையிலான பல்வேறு திட்டங்களை
மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான முடிவு விரைவில் எடுக்கப்படும் என தெரிகிறது.
வரும் பட்ஜெட் தொடரில் தாக்கல்?
ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய கடுமையான விதிகளை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய சட்டத் திருத்தத்தை வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
18 லட்சம் மோசடி வழக்குகள்
இந்தியாவில் 18 லட்சத்திற்கு மேற்பட்ட காசோலை மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் 38,000 வழக்குகள் உயர்நீதிமன்றங்களில் உள்ளது.
வடமாநிலங்களே அதிகம்
இதில் பெரும்பாலான வழக்குகள் 5 வருடங்களுக்கு மேலாக நிலுவையில் இருப்பவை. மஹாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் தான் அதிக அளவில் காசோலை மோசடி வழக்குகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.