பெருகி வரும் புலிகள்.. சரணாலயங்களை அதிகரிக்க மத்திய அரசு முடிவு
டெல்லி: நாடு முழுவதும் பெருகி வரும் புலிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு அவற்றின் பாதுகாப்பிற்காக அதிக சரணாலயங்களை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டில் தற்போது புலிகளுக்காக 47 சரணாலயங்கள் உள்ளன.
பெருகிவரும் புலிகளின் நலனைக் கருத்தில் கொண்டு விரைவில் இவற்றை 50ஆக அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று மத்திய சுற்றுப்புற சூழல் அமைச்சக அதிகாரி ஒருவர் கூறினார்.
காஸிதாஸ் பூங்கா
சத்தீஸ்கரில் உள்ள குரு காஸிதாஸ் தேசியப் பூங்காவை நாட்டின் 48வது புலிகள் காப்பகமாக அறிவிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கொள்கை அளவில் அனுமதி அளித்துள்ளது.
காவேரி வனவிலங்கு சரணாலயம்
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் அனுமதி அளித்ததை அடுத்து, கர்நாடகத்தில் உள்ள காவேரி வனவிலங்கு சரணாலயத்தையும், மாலே மஹாதேஸ்வரா மலை வனவிலங்கு சரணாலயத்தையும் புலிகள் காப்பகமாக அறிவிக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், கர்நாடக மாநில அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
30.5 சதவீதம் உயர்வு
கடந்த வாரம் வெளியிடப்பட்ட புள்ளிவிவரப்படி, நம் நாட்டில் 2010ஆம் ஆண்டு 1,706 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை தற்போது 30.5 சதவீதம் உயர்ந்து 2,226ஆக உயர்ந்துள்ளது.
சரணாலயமும் அதிகரிப்பு
எனவே, அதிக வகையான தாவரங்கள், விலங்குகள், பறவைகள், புலிகள், புலிகளுக்கு உணவாகக்கூடிய விலங்குகள் ஆகியவற்றின் எண்ணிக்கையை வனவிலங்கு சரணாலயங்களில் அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தொடங்கியுள்ளது என்றும் அந்த அதிகாரி கூறினார்.