நேதாஜி பற்றிய மேலும் 25 ஆவணங்களை நாளை வெளியிடுகிறது மத்திய அரசு
டெல்லி: இந்திய விடுதலைக்கு போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பாக மத்திய அரசிடம் உள்ள மேலும் 25 ஆவணங்கள் நாளை வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சுதந்திர போராட்ட தலைவர் நேதாஜியின் மரணத்தில் தொடர்ந்து மர்மம் நிலவுகிறது. அவர் விமான விபத்தில் இறந்துவிட்டார் என்றும் இந்தியாவில் தலைமறைவாக வாழ்ந்து 1964-ம் ஆண்டு இறந்து விட்டார் என்றும் பல தகவல்கள் கூறுகின்றன. எனினும் அவருடைய கடைசி கால வாழ்க்கை பற்றி மர்மம் நிலவி வந்தன.
இந்நிலையில் மத்தியில் பாஜக அரசு அமைந்ததும் நேதாஜி தொடர்பான ஆவணங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி மத்திய அரசிடம் மேலும் உள்ள 25 ஆவணங்கள் நாளை வெளியிடப்படும் என மத்திய கலாசார துறை தெரிவித்துள்ளது.
மேலும் நேதாஜி தொடர்பாக மற்ற நாடுகளில் உள்ள ஆவணங்களை அந்தந்த நாடுகள் வெளியிடுமாறும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் 23-ஆம் தேதி நேதாஜியின் 119-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவர் தொடர்பான 100க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை பிரதமர் மோடி வெளியிட்டார். அதைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 2-வது கட்டமாக 50 ரகசிய ஆவணங்களை வெளியிட்டது மத்திய அரசு.