பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க முடியாது.. மத்திய அரசு கறார்.. மக்களுக்கு அவதி உறுதி
Recommended Video
டெல்லி: பெட்ரோல் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ள போதிலும் அவற்றின் மீதான கலால் வரியைக் குறைப்பதற்கு மத்திய அரசு தயாராக இல்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெட்ரோல் விலை மீது லிட்டருக்கு 19 ரூபாய் 48 காசுகளும், டீசல் மீது 15 ரூபாய் 33 காசுகளும் கலால் வரியாக மத்திய அரசால் விதிக்கப்படுகிறது.
இந்த வரியைக் குறைத்தால் பெட்ரோல் டீசல் விலையை வெகுவாகக் குறைக்க முடியும் என்பதால் மத்திய அரசுக்குக் கோரிக்கைகள் வலுத்து வந்தன.
ரூ.30 ஆயிரம் கோடி
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை ஒரு ரூபாய் குறைத்தாலும், அரசுக்கு வருடம் 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். இதனால் நிதிப் பற்றாக்குறை மிகவும் அதிகரிக்கும்.
இன்னும் வரி செலுத்த வேண்டுமாம்
வருமான வரி மற்றும் ஜிஎஸ்டி வரி செலுத்துவது அதிகரித்தால் மட்டுமே வருமான இழப்பைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். அப்போதுதான் பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியைக் குறைக்க முடியும், என்று அந்த அரசு அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வரி சலுகைகள்
மத்திய அரசு ஏற்கெனவே 98 ஆயிரம் கோடிக்கு வருமான வரிச் சலுகையும், 86 ஆயிரம் கோடி ஜிஎஸ்டி குறைப்பும் வழங்கியுள்ளது. பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்ந்தாலும் கூட பணவீக்கம் என்பது நாட்டில் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. எனவே வரி குறைப்பு அவசியம் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம், பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வால் மக்கள் அவதிப்படுவது உறுதியாகியுள்ளது.
மக்கள் ஆதரவு
இதனிடையே மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்குச் சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணம். இந்த நிலைமை தற்காலிகமானதுதான் என்பதை மக்கள் புரிந்து கொண்டிருப்பதால்தான், எதிர்க்கட்சிகள் நடத்திய கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கிடைக்கவில்லை என்று தெரிவித்தார்