வளைந்து வளைந்து பாம்பு டான்ஸ் ஆடிய டீச்சர்.. கூட சேர்ந்து மகுடி ஊதிய வாத்தியார்கள்.. சஸ்பெண்ட்!
பாம்பு நடனம் ஆடிய டீச்சர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
Recommended Video
ஜெய்ப்பூர்: சுடிதார் போட்ட டீச்சர் ஒருவர் வளைந்து.. நெளிந்து.. வாத்தியார்களுடன் பாம்பு டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.. ஆனால், ஒரு டீச்சர் இப்படி ஆடலாமா என்று கேட்டு அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜலோரில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான டிரெயினிங் கிளாஸ் சில தினங்களுக்கு முன்பு நடந்தது. இதில் ஏராளமான ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி வகுப்பில் இடைவேளையின்போது, பங்கேற்ற 2 ஆசிரியர்கள் மற்றும் 1 ஆசிரியை என 3 பேர் பாம்பு டான்ஸ் ஆடினர்.. வடநாட்டில் பாம்பு போல வளைந்து நெளிந்து ஆடுவதுதான் நாகினி டான்ஸ்.. இதனை ஒரு டீச்சர் அங்கிருந்த ஆசிரியர்கள் முன்பு ஆடினார். இவருடன் 2 வாத்தியார்களும் சேர்ந்து இதே டான்சை ஆடவும், கூடியிருந்த மற்ற ஆசிரியர், ஆசிரியைகள் கைதட்டி மகிழ்ந்தனர்.
இதனை அங்கிருக்கும் ஒருவரே வீடியோவும் எடுத்து இணையத்தில் போட்டுவிட்டார். இது வைரலாக ஆரம்பித்து பரபரப்பாகி... சர்ச்சையும் வெடித்தது. இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் டான்ஸ் ஆடிய டீச்சர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். அவருடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய 2 வாத்தியார்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் அசோக் ரோஷ்வால் சொல்லும்போது, "நடனம் மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் சில நடத்தை நெறிமுறைகள் உள்ளது. அதை பின்பற்ற வேண்டும். அதனால்தான், ஆசிரியை சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். மற்ற 2 ஆசிரியர்களும் புதிதாக தேர்வு செய்யப்பட்டவர்கள் என்பதால் அவர்களுக்கு விதிகள் தெரியவில்லை, அதனால் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது" என்றார்.
ஆனால், ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு பல்வேறு துறையினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இடைவேளையின்போதுதானே, இவர்கள் டான்ஸ் ஆடி இருக்கிறார்கள்? இதில் என்ன தவறு? சக ஊழியர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளகூடாதா? என்பன போன்ற கேள்விகளும் எழுந்து வருகின்றன.