குறைந்த விலையில் 504 வகை மருந்துகள்... ஜூலையில் அமலாகிறது 'ஜன் அவ்ஷதி' திட்டம்
டெல்லி: அத்தியாவசியமான மருந்துகளை குறைந்த விலையில் மக்களுக்கு விற்பனை செய்யும் திட்டத்தை ஜூலை 1ம் தேதி முதல் மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.
மருந்துகளின் விலை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. நோயாளிகள் அதிகவிலை கொடுத்து மருந்துகளை வாங்கி பயன்படுத்தும் நிலையுள்ளது. இந்நிலையில், முக்கிய மருந்துகளை தரமாகவும், குறைந்த விலையிலும் மக்களுக்கு கிடைக்கும் வகையிலான திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.
இந்த திட்டத்துக்கு ஜன் அவ்ஷதி என பெயரிடப்பட்டுள்ளது. முக்கிய மருந்துகளை பொது மற்றும் தனியார் மருந்து நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்து மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்க செய்வதே இத்திட்டத்தின் நோக்கம். ஆன்டிபயாடிக், வலி நிவாரணி, வைட்டமின் மாத்திரைகள் உள்ளிட்ட 504 மருந்துகள் அத்தியாவசிய மருந்துகள் என கண்டறியப்பட்டுள்ளது. இருதயநோய், சுவாச கோளாறு, நீரிழிவு, ரத்தகொதிப்பு உள்ளிட்ட நோய்களுக்கு இந்த மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், முக்கிய மருந்துகளை தரமாகவும் குறைந்த விலையிலும் மக்களுக்கு விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் இத்திட்டத்தின் முதல்கட்டமாக முக்கியமான 100 மருந்துகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. படிப்படியாக இதன் எண்ணிக்கை 504ஆக அதிகரிக்கப்பட உள்ளது. முதல்கட்டமாக டெல்லியில் 800 மருந்துகடைகளில் குறைந்த விலைக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படும். இந்தாண்டு இறுதிக்குள் மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட பெரு நகரங்களில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
குறைந்த விலைக்கு மருந்துகள் தயாரிக்க டெண்டர் விடும் பணி ஏற்கனவே தொடங்கி விட்டது. குறைந்த விலையில் மருந்துகள் விற்பனை திட்டத்துக்கு தனியார் நிறுவனங்கள், டாக்டர்கள் முதலில் அதிருப்தி தெரிவித்தனர். தற்போது இதற்கு ஒத்துழைப்பதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் மருந்துகள் தரமாக தயாரிக்கப்படுகிறதா, இதில் ஏதேனும் முறைகேடு நடக்கிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.