இதுதான் விஷயமா.. அந்தமான் ஆதிவாசிகளால் அமெரிக்கர் கொலை செய்யப்பட்டதில் தவறு யார் மீது தெரியுமா?
Recommended Video
போர்ட் பிளைர்: அந்தமான் தீவில் ஆதிவாசிகளால் அமெரிக்காவை சேர்ந்த ஜான் ஆலன் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் அவர் மீதோ அல்லது ஆதிவாசிகள் மீதோ குற்றம் சுமத்துவதற்கு எதுவுமே கிடையாது.
உண்மையான பிரச்சனை அரசிடமிருந்து தான் ஆரம்பித்து உள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
ஆதிவாசிகள் இருக்கக்கூடிய, சென்டினல் குட்டி தீவு பகுதி என்பது பிறர் செல்வதற்கு தடை விதிக்கப்பட்ட பகுதியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில், மத்திய மோடி அரசு, சென்டினேலீஸ் ஆதிவாசிகள் இருக்கக்கூடிய இந்த சென்டினல் தீவு உட்பட 28 தீவுகளை தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து விலக்கிக்கொண்டது.
அனுமதியில்லாமல் செல்லலாம்
2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை இந்த தடை விலக்கம் என்பது நீடிக்கும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. இப்படி தடையை விலக்கிக் கொண்டால், அந்த தீவுபகுதிகளுக்கு வெளிநாட்டினர், அரசின் எந்த அனுமதியும் பெறாமலேயே நேரடியாக செல்ல முடியும். இதனால்தான் அமெரிக்காவைச் சேர்ந்த மத போதகர், ஜான் ஆலன் அந்த, தீவுக்கு சென்று உள்ளார்.
அமெரிக்கர்
எனவே அத்துமீறியோ அல்லது அறியாமலோ இவர் அந்த தீவுக்கு செல்லவில்லை. அரசு தடை விலக்கிக் கொண்டதன் காரணமாக அதிகாரபூர்வமாக தீவுக்கு சென்றுள்ளார். அப்போதுதான் ஆதிவாசிகளால் அம்பு எய்து கொல்லப்பட்டுள்ளார். அவரது சடலம் கூட இன்னும் அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை. கிறிஸ்தவ மதப் பிரச்சாரம் செய்வது அவரது நோக்கமாக இருந்திருக்கலாம். ஆனால் அவருக்கு அதற்கான எந்த தடையும் பிறப்பிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
நோய் தொற்று அபாயம்
மானுடவியல் ஆய்வாளர் டி.என்.பண்டிட் இதுபற்றி கூறுகையில், சென்டினேலீஸ் ஆதிவாசிகளுடன் தொடர்புகொள்வதற்கு இப்படியான அவசரம் உதவாது. அந்த தீவில் தங்கமோ, வெள்ளியோ, எண்ணெய் வளமோ, எரிவாயுவோ கிடையாது. அது அந்த ஆதிவாசிகளுக்கு மட்டுமே உரிய தீவு. எண்ணிக்கையில் குறைவாக உள்ள அந்த ஆதிவாசிகளை காப்பாற்ற வேண்டியது நமது கடமை. ஒரு தொற்றுநோய் ஏற்பட்டால்கூட, அந்த ஆதிவாசி இனம் மொத்தமாக அழியக் கூடிய சூழ்நிலை உள்ள போது, அங்கே பிற நபர்களை செல்வதற்கு அனுமதி வழங்கியிருக்ககூடாது என்றார் பண்டிட்.
பரிசுகள் புறக்கணிப்பு
பண்டிட் 1967ம் ஆண்டிலேயே இந்திய அரசுடன் இணைந்து சென்டினேலீஸ் ஆதிவாசிகளுடன் இணக்கம் காட்ட ஒரு திட்டம் வகுத்தார். பல பரிசுப் பொருட்களை வடக்கு சென்டினல் தீவு பகுதியில் வைத்து விட்டு வந்தார். ஆனால் அந்த பரிசுப் பொருட்களை ஆதிவாசிகள் தீண்டவே இல்லை. தொடர் முயற்சிகளுக்கு பிறகு 1991ஆம் ஆண்டு அவர்களுடனான தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியை விட்டுவிடலாம் என்று முடிவு செய்தார்.
வேட்டையாடும் சமூகம்
1991ம் ஆண்டில் தான் இந்த தீவில் முதல் முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது. அங்கு 117 பேர் இருப்பதாக கணக்கிடப்பட்டது. 2011ம் ஆண்டு அங்கு 15 பேர் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டது. இந்த தீவில் ஆதிவாசிகள் விவசாயம் செய்யவில்லை. அதற்கு பதிலாக வேட்டையாடும் சமூகமாகவே இன்னும் வாழ்கிறார்கள். மீன்பிடித்தல், வேட்டையாடுதல், வனப்பகுதியில் உள்ள காய்கறிகளை பறித்து சாப்பிடுதல் என்பதுதான் இவர்கள் வாழ்க்கை முறையாக உள்ளது.