3வது குழந்தைக்கு வாக்குரிமை கொடுக்காதீங்க.. மது, மாட்டிறைச்சியை தடை பண்ணுங்க.. பாபா ராம்தேவ் பரபர!
ஹரித்துவார்: குடும்பத்தில் மூன்றாவதாக பிறக்கும் குழந்தைகளுக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என யோகா குரு பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
நாட்டின் மக்கள் தொகை 133 கோடியை தாண்டியுள்ளது. மக்கள் தொகையில் சீனா முதலிடம் வகிக்க இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.
மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைளை அரசு முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் மக்கள்தொகையை கட்டுப்படுத்தும் வகையில் யோகா குரு பாபா ராம் தேவ் அரசுக்கு யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார்.
பழங்குடி இனத்தில் இருந்து ஒரு வரலாறு.. சாதனை படைத்த சந்திராணி முர்மு!
வாக்குரிமை அளிக்கக்கூடாது
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியாதாவது, இந்தியாவில் பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த குடும்பத்தில் மூன்றாவதாக பிறக்கும் குழந்தைகளுக்கு அரசு வாக்குரிமை அளிக்கக்கூடாது.
150 கோடியை தாண்டக்கூடாது
அடுத்த 50 ஆண்டுகளில் இந்திய மக்கள் 150 கோடியை தாண்டக்கூடாது. ஏனெனில் அதற்கு மேலான மக்கள் தொகையை தாங்க நாம் தயாராக இல்லை.
உதவிகள் கூடாது
ஆகையால் குடும்பத்தில் மூன்றாவதாக பிறக்கும் குழந்தைக்கு ஓட்டுரிமை வழங்கக்கூடாது. அந்தக்குழந்தை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது. மேலும் அரசின் உதவிகளையும் அந்த குழந்தை பெறக்கூடாது.
சட்டம் இயற்ற வேண்டும்
இதற்கு ஏற்ற வகையில் அரசு சட்டம் இயற்ற வேண்டும். இப்படி ஒரு சட்டத்தை அரசு இயற்றிவிட்டால் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அதிக குழந்தையை பெற்றுக்கொள்ள மாட்டார்கள்.
சண்டையை தடுக்க ஒரே வழி
இதேபோல் பசுக்களை கொல்வதையும் தடை செய்ய வேண்டும். பசுக்களை கொல்வதை தடை செய்வது ஒன்றுதான் பசு கொல்லையர்களுக்கும் பசு பாதுகாவலர்களுக்கும் இடையிலான சண்டையை தடுக்க ஒரே வழி. மாட்டிறைச்சி சாப்பிட விரும்புபவர்கள், உண்ணும் வகையில் பல இறைச்சிகள் உள்ளன. அவற்றை சாப்பிடலாம்.
இந்தியாவில் ஏன் முடியாது?
நாடு முழுவதும் மதுவை தடை செய்ய வேண்டும். இஸ்லாமிய நாடுகளில் மது முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி இருக்கையில் இந்தியாவில் மட்டும் ஏன் தடை செய்ய முடியாது?
முனிவர்கள் வாழும் பூமி
இந்தியா முனிவர்கள் வாழும் பூமி. இங்கு மது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டிய ஒன்று என்று கூறினார். மேலும் பேசிய அவர், பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாலகிருஷ்ணா ஆச்சார்யாவுக்கு ஜெனீவாவில் உள்ள யுஎன்எடிஜி அமைப்பு 10 செல்வாக்கு மிகுந்த சுகாதாரத்துறை நபர் என்ற விருதை வழங்கியிருப்பதாக கூறினார்.