நெடுஞ்சாலை திட்டங்களால் 5 லட்சம் பேருக்கு கூடுதலாக வேலை உறுதி- கட்காரி
டெல்லி: நெடுஞ்சாலைகளில் மரம் நடுகின்ற புதிய திட்டத்தினால் ஐந்து லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "வாகனங்களின் முகப்பு விளக்கு ஒளி எதிரே வரும் வாகனங்களின் ஓட்டுனர் கண்களை கூச வைப்பதால் தான் பெரும்பாலான விபத்துகள் நேரிடுகின்றன.
அதை தவிர்க்க புதிய தொழில்நுட்பம் பின்பற்றப்படும். சாலையின் இருபுறமும் மரங்கள் நடுவது இப்போதைய 97 ஆயிரம் கிலோ மீட்டர் நெடுஞ்சாலையிலும், புதிதாக அமைக்கப்பட உள்ள 40 ஆயிரம் கிலோ மீட்டர் சாலையிலும் மேற்கொள்ளப்படும்.
இந்த புதிய திட்டத்தால் ஐந்து லட்சம் பேருக்கு கூடுதலாக வேலை கிடைக்கும்.அந்தந்த பகுதி மண் வளத்திற்கு ஏற்ப மரங்கள் வளர்க்கப்படும். மகாராஷ்டிராவின் கொங்கண் பகுதியில் மாமரங்களும், சத்தீஸ்கரில் புளிய மரங்களும் வளர்க்கப்படும். இடையிடையே மலர், பழச் செடிகளும் வளர்க்கப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.