சென்னை, மதுரை, கோவை .... 12 தமிழக நகரங்கள் உட்பட 98 நகரங்கள் "ஸ்மார்ட் சிட்டி" திட்டத்துக்கு தேர்வு!
டெல்லி: தமிழகத்தின் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட 12 நகரங்களையும் சேர்த்து நாடு முழுவதும் 98 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாடு முழுவதும் 98 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இதில் 24 தலைநகரங்கள், 24 வர்த்தகம் மற்றும் தொழில் நகரங்கள்; சுற்றுலா மற்றும் கலாசார முக்கியத்துவம் வாய்ந்த 18 நகரங்கள்... 5 துறைமுக நகரங்கள்; கல்வி மற்றும் சுற்றுலாத் துறை சார் நகரங்கள் 3 ஆகும்.
Shri @MVenkaiahNaidu announces the list of 98#SmartCity nominees pic.twitter.com/CmHYaOqbdG
— MIB India (@MIB_India) August 27, 2015
நாட்டில் மிக அதிகமாக உத்தரப்பிரதேசத்தில் 13, தமிழகத்தில் 12, மகாராஷ்டிராவில் 10, மத்திய பிரதேசத்தில் 7, கர்நாடகா மற்றும் குஜராத்தில் தலா 6 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
ஸ்மார்ட் சிட்டிக்காக தேர்வு செய்யப்பட்ட 12 தமிழக நகரங்கள் விவரம்:
மதுரை, கோவை, சென்னை, வேலூர், சேலம், திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், தஞ்சை, தூத்துக்குடி, திருநெல்வேலி, ஈரோடு
இந்தப் பட்டியலில் இடாநகர், பாட்னா, சிம்லா, பெங்களூர், டாமன், திருவனந்தபுரம், புதுச்சேரி, காங்டாக், கொல்கத்தா சேர்க்கப்படவில்லை.
இந்த 98 நகரத்துக்கும் தொடக்கமாக தலா ரூ2 கோடி ஒதுக்கப்படும். அதன் பின்னர் 2வது கட்டமாக அடுத்த சில மாதங்களில் ஒவ்வொரு நகரத்துக்கும் 5 ஆண்டுகளுக்கு ரூ100 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு வெங்கையா நாயுடு தெரிவித்தார்.