ஆர்.எஸ்.எஸ்ஸை மிகக் கடுமையாக எதிர்த்த இடதுசாரி சிந்தனையாளர் கெளரி லங்கேஷ்!
பெங்களூர்: பெங்களூரில் இன்று மிகக் கோழைத்தனமாக சுட்டுக் கொல்லப்பட்ட லங்கேஷ் பத்திரிகை ஆசிரியர் கெளரி லங்கேஷ், தீவிர இடது சாரி சிந்தனையாளர். ஆர்.எஸ்.எஸ்ஸை மிகக் கடுமையாக, பகிரங்கமாக, துணிச்சலாக எதிர்த்து வந்தவர்.
பெங்களூரில் உள்ள ராஜராஜேஷ்வரி நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று மாலை சுட்டுக் கொல்லப்பட்டார் கெளரி. தனது தந்தையின் லங்கேஷ் பத்திரிகையை நடத்தி வந்தார்.
தீவிர இடது சாரி சிந்தனையாளராக திகழ்ந்தவர் கெளரி. ஆர்.எஸ்.எஸ். மற்றும் வலதுசாரி கொள்கைகளை மிகக் கடுமையாக, தீவிரமாக எதிர்த்து வந்தவர். நக்சலிசம் குறித்து மிக விரிவாக பல கட்டுரைகளை எழுதியவர். இதனால் நக்சலைட் ஆதரவாளர் என்றும் முத்திரை குத்தப்பட்டவர்.
Recommended Video
இந்த கோரக் கொலை குறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுகையில், அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மிக நெருக்கத்தில் வைத்து அவரை சுட்டுள்ளனர். ஒரு நிமிடத்துள்ளாக கெளரி உயிரிழந்து விட்டார்.
அவர் தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று ஒருபோதும் கேட்டதில்லை. இதனால் அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.